பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளியை தென்காசி மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பல சீறிய முயற்சிகளை முன்னெடுத்து குற்றவாளி பாலமுருகனை கைது செய்த தென்காசி மாவட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் வெகுவாக பாராட்டினார். தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையம் கல்யாணிபுரம் ஊரைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் பாலமுருகன். சரித்திர பதிவேடு ரௌடியான பாலமுருகன் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஆதாய கொலை, திருட்டு மற்றும் 72-க்கும் மேலான பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவர் பொதுமக்களை அச்சுறுத்தி நகை மற்றம் பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டவர்.
2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் ராஜன் என்பவரை 2 லட்சம் ரூபாய் பணத்திற்காக கொலை செய்து போர்வையில் சுற்றி ஆற்றில் எரிந்துள்ளார். மேலும் 2019ஆம் ஆண்டு கடையம் ஊரைச் சார்ந்த செந்தாமரை மற்றும் அவரது கணவர் சண்முகம் இருவரும் அவர்களது தோப்பு வீட்டில் தனியாக வசித்தவர்களிடம் மேற்படி பாலமுருகன் அரிவாளை வைத்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்றபோது மேற்படி வயதான தம்பதிகள் இருவரும் கையில் கிடைத்த பிளாஸ்டிக் சேர் மற்றும் துடப்பம் ஆகியவற்றைக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தினர். அப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்காக தமிழக முதல்வர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். இவ்வழக்கிலும் பாலமுருகன் முக்கிய குற்றவாளி ஆவார்.
இவர் காவல்துறையினரின் பாதுகாப்பில் இருந்து பலமுறை தப்பிச் சென்றுள்ளார். 2021ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பேராவூரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டவர். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சையில் இருக்கும் போது மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 2023ஆம் ஆண்டு கேரளா மாநிலம், மறையூர் காவல் நிலைய குற்ற வழக்கு சம்பந்தமாக கேரளா மாநில போலீசாரல் கைதி வழிக்காவலில் கொண்டு செல்லும் போது திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகில் வைத்து போலீசாரை தாக்கிவிட்டு மீண்டும் தப்பிச்சென்றவரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கேரளா மாநிலம், திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலமுருகன் திருச்சூர் வியூர் High Security Prison-க்கு மாற்றப்பட்டார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய குற்ற வழக்கிற்காக தமிழக போலீசாரால் 17.05.2024ம் ஆண்டு தேனி பெரியகுளம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் திருச்சூர் High Security Prison-ல் அடைக்க கொண்டு செல்லும்போது சிறை முன்பு காவல் வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றவரை காவலர்கள் தேடிவந்தனர்.
போலீசாரிடமிருந்து தப்பிச்சென்ற ரௌடி பாலமுருகன் கடையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, சாத்தூர், திருப்பூர், திருத்துறைப்பூண்டி மற்றும் சென்னை போன்ற பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை பிடிப்பதற்காக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில், ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில், கடையம் அருகே ரௌடி பாலமுருகன் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பாலமுருகனை சுற்றிவழைத்து பிடிக்க முயன்றபோது போலீசாரிடமிருந்து தப்ப முயன்று கால் முறிவு ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து தற்போது திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பலமுறை போலீசாரிடமிருந்து தப்பிச் சென்ற குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளியான பாலமுருகனை பல சீறிய முயற்சிகளை முன்னெடுத்து கைது செய்த தென்காசி மாவட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.