குற்றாலம் பகுதியில் பேருந்து நிலையத்தில் வசித்து வந்த ஆதரவற்ற பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான முதலுதவி, கவுன்சலிங் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே சாலையில், ராகிணி என்ற 55வயது பெண் ஆதரவற்ற நிலையில் குற்றாலம் பேருந்து நிலையத்தில் வசித்து வந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆதரவற்று இருந்த இந்த பெண்மணி மீட்கப்பட்டு குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து தென்காசி சமூக நலத்துறைத் துறைக்கு பொதுக்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் உடனடியாக களத்திற்கு சென்ற சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் பசியில்லா தமிழகம் அறக்கட்டளை குழுவினர்கள் அந்த பெண்மணியை மீட்டெடுத்து குற்றாலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, காவல்துறை மூலமாக உரிய அனுமதி பெற்று, பசியில்லா தமிழகம் மூலம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் பெண்களால் பெண்களுக்காக செயல்பட்டு வரும் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறார். அந்த இல்லத்தில் பசியில்லா தமிழகம் அமைப்பின் செயலாளர் ஜமீமா ஜின்னா மூலம் அந்த பெண்ணுக்கு தேவையான கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் அந்த இல்லத்தில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற வயதான பெண்கள் இருந்தால், அரசு அனுமதி பெற்று நடைபெறும் இலவச காப்பகமான பசியில்லா தமிழகம் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தை உடனடியாக 9363914416 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பசியில்லா தமிழகம் அமைப்பின் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.