தென்காசி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை மாவட்டம் முழுவதையும் புரட்டி போட்டுள்ளது. வரலாறு காணாத பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக தொழில் துறைகள் அனைத்தும் முடங்கியுள்ளது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைக்கு ரூபாய் 6000 நிவாரண உதவி வழங்க வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பரவலாக அதி கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, மூன்று நாட்களாக அனைத்து விதமான தொழில்களும், வியாபாரங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. கட்டுமான தொழில்கள் முழுமையாக முடங்கி விட்டது. கொத்தனார் வேலை செய்யும் தொழிலாளர்கள், தச்சு வேலை செய்யும் தொழிலாளர்கள், எலக்ட்ரிக்கல் வேலை, பிளம்பிங் வேலைகள், பெயிண்ட் வேலைகள் செய்யும் தொழிலாளர்கள், அனைவரும் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்களின் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் வீடுகளிலுள்ள பொருட்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. வியாபாரிகள் கடைகளை திறக்காமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால், கடைகள் வியாபாரம் இன்றி வெறுமனே காட்சியளிக்கிறது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டிலேயே தென்காசி மாவட்டத்தில் தான் அதிக மழை பெய்துள்ளது. எனவே இவை அனைத்தையும் அரசு கவனத்தில் கொண்டு தென்காசி மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு 6000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் கட்டி அப்துல் காதர் கோரிக்கை வைத்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.