சங்கரன்கோவில் பகுதியில் ஆதரவற்ற மனநலம் பாதித்த பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான முதலுதவி செய்யப்பட்டு வடகரை அன்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியில் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக காவல்துறை மூலமாக பசியில்லா தமிழகத்திற்கு தகவல் வந்தது. பசியில்லா தமிழகம் குழுவினர் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் அனுமதியின் பேரில் சங்கரன்கோவில் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
சங்கரன்கோவிலுக்கு விரைந்து சென்ற பசியில்லா தமிழகம் குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்ணை சங்கரன்கோவில் காவல் ஆய்வாளர் அனுமதியுடன் பெண் காவலர்கள் உதவியுடன் மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி செய்து பசியில்லா தமிழகம் ஆம்புலன்ஸ் உதவியுடன் தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை வழங்கி விரைவில் அவரது குடும்பத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது பெயர் முருகவள்ளி, ஊர் காலாங்கரை, நடுத்தெரு என்றும் கணவர் பெயர் பாலமுருகன் மற்றும் மகன் பெயர் முகில் கணேஷ், மகள் செல்வந்தினி, தம்பி பெயர் ரவி என்றும் கூறுகிறார். அனைவரும் இறந்து விட்டதாகவும் கூறுகிறார். மனநலம் பாதிக்கப்பட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதாக நினைத்து சங்கரன்கோவிலுக்கு வந்து விட்டார். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக சங்கரன்கோவில் காவல் நிலையத்தையோ அல்லது பசியில்லா தமிழகம் அமைப்பை 9363914416 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு பசியில்லா தமிழகம் குழு தெரிவித்துள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.