கடையம் யூனியன் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு..

கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திரண்டு வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள இந்திரா நகரில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு இந்திரா நகரில் உள்ள, 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் மூலம் தினந்தோறும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வாட்டர் டேங்கின் பில்லர்கள் மிகவும் பழுதடைந்த காரணத்தினால், அதனை சரி செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக வாட்டர் டேங்கில் தண்ணீர் நிரப்ப முடியாமலும், பொதுமக்களுக்கு அதன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய முடியாமலும் இருந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் தேவையான தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த வாட்டர் டேங்கை சரி செய்ய மேலும் பல நாட்கள் ஆகலாம் என்ற நிலை இருந்துள்ளது. 

இந்நிலையில் உடனடியாக அப்பகுதி மக்களுக்கு, மாற்று வாட்டர் டேங்க் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என்று சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் மற்றும் முதலியார்பட்டி 9 வது வார்டு உறுப்பினர் பாக்யராஜ் தலைமையில், இந்திரா நகர் பகுதி மக்கள் கடையம் யூனியன் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அவர்களிடம் மனுவை பெற்றுக் கொண்ட கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஓரிரு தினங்களில் சரி செய்து, அனைத்து மக்களுக்கும் முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கடையம் யூனியன் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!