தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 07.10.2024 திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மூளை முடக்குவாதம் புற உலக சிந்தனையற்ற மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.23,000 வீதம் 07 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,61,000 மதிப்பிலான மென்பொருளுடன் கூடிய உபகரணங்களையும், மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 10 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.



மாநில அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு விருதான மணிமேகலை விருதினை வாடியூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு துணை முதலமைச்சரால் வழங்கப்பட்ட விருதினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 385 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் லாவண்யா (தென்காசி), கவிதா (சங்கரன்கோவில்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா ப்ரியதர்ஷினி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயூப் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.