தென்காசியில் “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 07.12.2024 அன்று “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை கடைநிலை மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாவட்டம் முழுவதிலும் உள்ள நீரழிவு நோயாளிகள், புற்று நோயாளிகள், HIV நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து காசநோய் பரிசோதனை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், மலைக் கிராமங்கள், தொலைதுார கிராமங்கள் மற்றும் சிறு குறு பகுதிகள் என அனைத்து பகுதிகளுக்கும், மக்கள் வசிக்கும் இடங்களுக்கே நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது.

காசநோய் அதிகம் பாதித்த கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் “காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிரச்சார” முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 30% வரை புதிய நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஆண்டிற்கு 1500 நோயாளிகள் வரை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார். முன்னதாக காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் பிரசாரத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் பொ. பிரேமலதா, துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்) V.P. துரை, மாவட்ட நல அலுவலர் (பொது சுகாதாரம்) மருத்துவர் V. கோவிந்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் காசநோய் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.