அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் பொருளாதார சிக்கல்களின் காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போகிறது. இது போன்ற மாணவிகளின் கல்லூரி கனவை நிறைவேற்றும் பொருட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் (புதுமைப்பெண்) திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்கள் கல்லுாரி படிப்பை முடிக்கும் வரை மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுவருகிறது. இதுவரை தென்காசி மாவட்டத்தில் 3829 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். தற்போது இத்திட்டமானது அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, கல்லூரி நிர்வாகம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் ரூ.1000 உதவிதொகை பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட அரசு பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்த “தமிழ்ப்புதல்வன்” என்னும் திட்டம் நடப்பு நிதியாண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி தொடரும் தகுதியுடைய மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது கல்லூரியில் உள்ள புதுமைப்பெண் திட்டபொறுப்பு அலுவலர்களிடம் தங்களது விவரங்களை பதிவு செய்து இத்திட்டத்தினை பயன்படுத்தி உயர்கல்வி பயின்று முன்னேற்றமடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!