நெல்லை-கடையம் பேருந்துகள் சரியாக இயக்கப்பட வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்..

நெல்லை – கடையம் பேருந்துகள் சரியாக இயக்கப்பட வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்..

நெல்லை-கடையம் பேருந்துகள் சரியாக இயக்கப்பட வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் பேருந்து மற்றும் பயணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டியில், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், பேருந்துகள் மற்றும் பயணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை முதல் கடையம் வரையிலான பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என்று தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இதனை சரி செய்யும் நோக்கில், அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, உறுப்பினர்கள் ரவணசமுத்திரம் சேவாலயா பொறுப்பாளர் சங்கிலி பூதத்தான், பொட்டல் புதூர் தமுமுக நிர்வாகி மதார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர் யஹ்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க பொருளாளர் பாக்யராஜ் வரவேற்றார். முதலியார்பட்டி தமுமுக தலைவர் காலித் நன்றி கூறினார். மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் செயலாளர் சிராஜ், முஸ்லிம் லீக் கடையம் ஒன்றிய செயலாளர் காதர் மைதீன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நெல்லை முதல் கடையம் வரையிலான, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சரியான நேரங்களில் இயக்கப்படுவதில்லை. பேருந்து நிறுத்தங்களில் முறையான கால அட்டவணை இல்லை. எனவே தற்போதைய கால அட்டவணையை அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் அமைக்க வேண்டும். கடையம் முதல் முக்கூடல் வரை புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். நெல்லை முதல் கடையம் வரை அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் நபர்களுக்காக, 1 to 1 அல்லது குளிர்சாதன பேருந்து இயக்க வேண்டும். கடையம் நகருக்கு பேருந்துகள் சரியான நேரத்தில் வந்து செல்வதை அறியவும் பேருந்துகளை பயணிகள் அறிந்து கொள்ளவும் நேரக் காப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். தென்காசி முதல் நெல்லைக்கு பேருந்துகள் கடையம், முக்கூடல் வழியாக இயக்க வேண்டும். பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒதுக்கப்ட்டுள்ள இடத்தை நடத்துனர்கள் ஒதுக்கி தரவேண்டும்.

பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடம் என்பதை தெளிவாக பேருந்தில் எழுத வேண்டும். இரவணசமுத்திரம் வழி பேருந்துகளை (129 M) குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க வேண்டும். இரவணசமுத்திரம் வழி என்று பேருந்தில் அறிவிப்பு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதியம் 3 மணி மற்றும் இரவு 9 மணிக்கு செல்ல வேண்டிய தனியார் பேருந்து, மதியம் 1.30 இரவு 7.30 மணிக்கு சம்பந்தமில்லாத நேரத்தில் சமீப காலமாக செல்வது தவிர்க்கப்பட வேண்டும். இரவு 10 மணிக்கு செல்ல வேண்டிய, தனியார் பேருந்து தற்போது அந்த நேரத்திற்கு செல்வதே இல்லை. இதனால் இரவு நேர ரயில் பயணங்கள், கல்லூரிகளுக்கு செல்லும் நபர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனையும் சரியாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்கள் மீது நெல்லை போக்குவரத்து பணிமனை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!