தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 475 மனுக்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார்.



மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் செவித்திறன் குறைபாடுடைய 4 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3,285 வீதம் மொத்தம் ரூ.13,140 மதிப்பிலான காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல் பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 475 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு. தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்