தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3,28,404 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (22.07.2024) திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.



தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத் திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ஈமச்சடங்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு தலா ரூ.17,000 வீதம் ரூ.68,000-க்கான நிதியுதவியினையும், பழங்குடியினர் நலத்துறையின் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளியர் இன மக்கள் 13 நபர்களுக்கு தலா ரூ.13,500 வீதம் ரூ.175,000-க்கான இலவச தையல் இயந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.5479 வீதம் ரூ.65,478-க்கான மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களையும் மற்றும் 3 பயனாளிகளுக்கு ரூ.6552 வீதம் ரூ.19,656-க்கான இலவச தேய்ப்பு பெட்டிகளையும் என மொத்தம் ரூ.3,28,404 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 925 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) அமிர்தலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயுப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.