தென்காசி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி சுற்றித் திரிந்த 35 வயது உடைய காட்டு யானையை, வனத்துறையினர் தீவிர சிகிச்சைக்குப் பின் மீட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நடமாடி ஓர் இடத்தில் படுத்துக் கொண்டிருந்த இந்த யானையைக் கண்காணிக்க, சிவகிரி வனச்சரகத்தின் கீழ் ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டது. அத்துடன் யானையின் சாணம் சேகாரம் செய்யப்பட்டு பரிசோதனைக்காக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அந்த யானை தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் படுத்திருந்தது வனத் துறையால் கண்டறியப்பட்டு, திருநெல்வேலி புலிகள் காப்பகத்தின் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் உத்தரவின் பேரில், மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. தென்காசி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் ராஜ் மோகன் முன்னிலையில், திருநெல்வேலி வனக் கால்நடை மருத்துவர் டாக்டர் மனோகரன் மற்றும் டாக்டர் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்குச் சிகிச்சை அளித்தனர். வனப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன், மருத்துவக் குழுவினர் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து யானைக்குச் சிகிச்சை அளித்து, அதன் உடல் நிலையைச் சீராக்கினர். தற்போது, யானை நல்ல நிலையில் மீட்கப்பட்டு, பாதுகாப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

