தமிழகத்திலிருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இருவர் தேர்வு; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து..

தமிழகத்திலிருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் ஆசிரியை மாலதி மற்றும் மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள இருவரையும் பள்ளி தலைமை ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஆசிரியை மாலதி, ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோர் கல்வித்துறையில் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என கீழைநியூஸ் மற்றும் சத்தியப்பாதை மாத இதழ் நிர்வாகமும் வாழ்த்துகிறது. தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ள இருவருக்கும் வெள்ளிப் பதக்கம், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை குடியரசுத் தலைவரால் வழங்கப்பட உள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கி கெளரவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!