ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 96 லட்சம் மோசடி; இருவர் கைது..

ஆன்லைனில் வீட்டிலிருந்து கொண்டே கை நிறைய சம்பாதிக்கலாம், ஆன்லைன் கேஷ்பேக் ஆஃபர், பொருட்கள் அனைத்தும் மிக குறைந்த விலையில் கிடைக்கும், குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டு & டெபிட்கார்டு பயன்படுத்தி ஆஃபர் பெறலாம் என்பதாக சமூக வலைதளங்களில் விதவிதமாக விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஃபர்களை நம்பி மோசடியில் சிக்கிக் கொண்ட பலர் தனது பணத்தை மீட்டுத் தரக்கோரி சைபர் கிரைமில் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில், சர்வதேச பங்குச் சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 96.5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் சைபர்கிரைம் போலீசார் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் மோசடி குறித்து தமிழ்நாடு காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகலாபம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களிடம் நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள். கடந்த 21.06.2024-ஆம் தேதி 45 வயதுக்குட்பட்ட மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் சர்வதேச பங்குச் சந்தையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிகபணம் சம்பாதிக்கலாம் என வந்த விளம்பரத்தை நம்பி 96,57,953 ரூபாய் பணத்தை முதலீடு செய்து இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். மேற்கண்ட விளம்பரத்தை நம்பி அவர் சைபர் குற்றவாளிகள் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். இறுதியில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தான் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார். இது தொடர்பாக, மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண் 20/2024, U/s 420 IPC and 66(D) of ITA Act 2008 வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டு மனுதாரர் எதிரிகளுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.38,28,000 முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி குற்றச் சம்பவம் தொடர்பாக 12.11.2024-ஆம் தேதி ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் உள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரிலும் மற்றும் தொடர் விசாரணையிலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற எதிரிகளான அப்துல் ரகுமான், S/o. இப்ராகிம் ஷா மணியம் மேலூர், மதுரை மாவட்டம் மற்றும் சுல்தான் அப்துல்காதர். S/o அலியார். மெகமதியார் 2வது சந்து தெற்கு வாசல், மதுரை மேற்படி எதிரிகளை 16.11.2024-ஆம் தேதி தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள், பாஸ்போர்ட பணம் எண்ணும் மெஷின் மற்றும் எதிரிகள் பதுக்கி வைத்திருந்த பணம் ரூ.3,25,000 ஆகியவற்றை கைப்பற்றி நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட எதிரிகள் சைபர் கிரைம் மூலம் பொது மக்களை பல வங்கி கணக்குகளை பயன்படுத்தி ஏமாற்றி பெறும் பணத்தினை எடுத்து அதை ATM Deposit மூலமாக பணத்தினை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு இதுவரை கோடி கணக்கில் பணப்பரிமாற்றம் செய்து ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.500 கமிஷன் வாங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுரைகள்:

1. இதுபோன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பாதீர்கள். பொதுமக்கள் இம்மாதிரியான மோசடிகளை கண்டால் உடனே சைபர்கிரைம் பிரிவையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுங்கள்.

2. அதிகப்படியான லாபம் தருவதாக அவர்கள் உறுதியளித்தால் அதில் மோசடிக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. முன் பின் தெரியாத நபர்களுடன் தொலைப்பேசியில் உங்களின் தனிப்பட்ட அல்லது நிதிசம்மந்தப்பட்ட தகவல்களை பகிரவேண்டாம்.

4. மோசடி செய்பவர்கள் அவசர சூழ்நிலையை உருவாக்கி நம்மை சிந்திக்க நேரம் கொடுப்பதில்லை. அதனால் அவர்களின் பேச்சை நம்பாமல் எந்தவொரு நடவடிக்கை எடுப்பதற்கு முன் உங்களின் நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை அணுகுங்கள்.

5. இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஏமாற்றும் உத்திகள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள். இம்மாதிரியான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம்.

6. உங்களின் வங்கி கணக்குகள் மற்றும் லோன் கணக்குகள் ஆகியவற்றில் ஏதேனும் அங்கீகிகரிக்கப்படாத பணப் பரிவர்த்தனைகள் ஏதும் நடைபெற்றுள்ளதா என தொடர்ந்து கண்காணியுங்கள்.

7. முக்கியமாக Two factor authentication-ஐ பயன்படுத்துங்கள்.

8. மேலும் பொதுமக்கள் தங்களின் வங்கி கணக்குகள் மற்றும் கிரிப்டோகரன்சி வேலட்டுகள் மற்றவர்களின் பயன்பாட்டிற்கு கடனாக கொடுப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனென்றால் அத்தகைய கணக்குகள் சைபர் குற்றவாளிகளால் பொதுமக்களை ஏமாற்றி நிதிமோசடி செய்வதற்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் செய்வதற்கு

இதுபோன்ற பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!