அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 2,23,536 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான (15.07.2024) அன்று உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கி வைக்கும் விதமாக, மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: “நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல. சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 07.05.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள்: மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல். வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி தமிழ்நாடு முதலமைச்சர் 15..09.2022 அன்று தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரையிலான செயல்பாடுகள்: முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,14,095 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர். மேலும், 28.02.2023 முதல் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயலியின் படி 1,005 நகர்ப்புற மையங்களில் 1,12,883 குழந்தைகளும், 963 கிராமப்புற மையங்களில் 41,225 குழந்தைகளும் பயனடைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, 25.8.2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விரிவுப்படுத்தி தொடங்கி வைத்தார். தற்போது முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில், 30,992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 18 இலட்சத்து 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் வரவேற்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்புப் பெற்றுள்ளதோடு, சத்தான உணவினை வழங்குவதன் காரணமாக பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட்செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதை கண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.

கள ஆய்வு வெளிப்பாடு: முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடர்பாக மாநில திட்டக் குழுவினரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு காலை திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவியர்களின் வருகை அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உணவுத் LDH600T 61 மாநில மதிப்பீடு மற்றும் செயலாக்கத் துறையினரின் தொடர் ஆய்வு மற்றும் மதிப்பீடுகளில், மாணவர்களிடையே கற்றலில் ஈடுபாடு மற்றும் ஆர்வம் அதிகரித்து கற்றல் திறன் மேம்பட்டுள்ளதுடன், மாணவர்களின் ஊக்கம், கவனிக்கும் திறன் மேம்பட்டுள்ளதாகவும், நேரம் தவறாமை மற்றும் தொடர்வருகை (Regular Attendance) அதிகரித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 2.50 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் வரும் கல்வி ஆண்டு முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும். கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும், தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு இந்தத் திட்டத்தினை விரிவுபடுத்தி, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான 15-7-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 4.7.2024 அன்று அறிவித்தார். 

அந்த அறிவிப்பிற்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 2,23,536 மாணவ, மாணவியர்கள் தினசரி பயன்பெறும் வகையில் ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களுக்கு உணவுப் பரிமாறி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், அம்மாணவ மாணவியர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் உணவருந்திய போது உணவு சுவையாக இருக்கிறதா என்றும், நேரம் தவறாமல், சரியான நேரத்தில் காலை உணவை தினசரி உண்ண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். முன்னதாக அப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவின் தரத்தினை முதலமைச்சர் சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.

சிறுபான்மை அமைப்பினரால் நடத்தப்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்தியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் மற்றும் வாணியம்பாடி முஸ்லீம் கல்வி கழக துணைச் செயலாளர் முகமது நஹீம் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளி வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

விழுப்புரம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 10 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தல்: விழுப்புரம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 2023-24 ஆண்டிற்கு 247 புறநகர பேருந்துகள் மற்றும் 64 நகரப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக இதுவரை 134 புறநகர பேருந்துகள் மற்றும் 12 நகர பேருந்துகள் புதிதாக கூண்டு கட்டி தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது இப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் 3.81 கோடி ரூபாய் செலவில் 8 புறநகர பேருந்துகள் மற்றும் 2 புதிய மகளிர் விடியல் பயணப் நகர பேருந்துகள், என மொத்தம் 10 புதிய பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் மப்பேடு கூட்ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், இனிகோ இருதயராஜ், எஸ். சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் எஸ். திவ்யதர்ஷினி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் க. இளம்பகவத், புனித அன்னாள் சபையின் தலைமை அன்னை சகோதரி கிளாரா வசந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!