இராமேஸ்வரம் மீனவர்கள் விரைவில் விடுதலை; இலங்கை அமைச்சர் உறுதி..!

வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரும் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று, வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கூறினார்.இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மல்லிகை நகரைச் சேர்ந்த ஆரோக்கியம்மாள் என்பவருக்குச் சொந்தமான படகில் இன்ஜின் பழுதானது. இதனால் அந்தப் படகு நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது காற்றின் வேகம் காரணமாக அந்தப் படகு இலங்கை கடற்பகுதிக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி அந்தப் படகையும், அதில் இருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் ஜோசப் பால்ராஜ் (37), பெனிட்டோ (40), நாகராஜ் (45), இன்னாசி (22), சுப்பிரமணி (35), முனியசாமி (48), சத்தியசீலன் (25) ஆகிய 7 பேரையும் சிறைபிடித்துச் சென்றனர்.இந்நிலையில், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் 7 பேரையும் இன்று (30ம் தேதி) மதியம் சந்தித்த வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், விரைவில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் கூறினார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது; “மதுரையிலுள்ள வழக்கறிஞர் தீரன் திருமுருகன் வேண்டுகோள் விடுத்ததன் பேரில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை நேரில் சென்று பார்வையிட்டேன். அவர்களின் விடுதலை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனுடன் பேசியுள்ளேன். மிக விரைவில் அவர்கள் நாடு திரும்புவார்கள்” என அவர் தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!