டிட்வா புயலால் இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் டிட்வா புயல் இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
டிட்வா புயலால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. மேலும் காணாமல் போன 100-க்கும் அதிகமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டுக்கு மத்திய அரசு நிவாரணப் பொருள்களுடன் 80 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் அனுப்பி வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தூதரகத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, கொழும்பு பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தூதரகம், அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது.
விமான நிலையத்திலோ அல்லது இலங்கையில் எப்பகுதியிலும் சிக்கலை எதிர்கொள்ளும் இந்தியர்கள் +94773727832 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணை வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம். உதவி மையத்தை நேரடியாகவும் அணுகலாம் .
கொழும்பு விமான நிலையத்தில் உள்ள இந்திய உதவி மையத்தில் பயணிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதி்களும் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You must be logged in to post a comment.