தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் SIR-படிவம் தொடர்பாக முக்கிய செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படியும், சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர். பொது (தேர்தல்) அறிவுரையின் படியும், தென்காசி மாவட்டத்தில், 01.01.2026 ஆம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.
இந்தத் தீவிர திருத்த செயல்பாட்டில் அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பினை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 என்ற எண்ணிக்கையில் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கணக்கீட்டு படிவங்களை சமர்பிக்கும் போது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அந்த படிவங்களில் உள்ள விவரங்கள் தன்னால் சரி பார்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது என்ற உறுதி மொழியினையும் வழங்க வேண்டும்.
“என்னால் வழங்கப்படும் இந்த தகவல்கள் அனைத்தும் என் பாகத்திற்குட்பட்ட வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன் எனவும், மேலும், தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம். 1950 பிரிவு 31-இன் படி தண்டணைக்கு உரியது என்பதையும் அறிவேன்” இவ்வாறு பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்த்து அவற்றை டிஜிட்டல் வடிவமாக தொடர்புடைய உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்பிப்பார். வாக்காளர் பதிவு அலுவலர் அப்படிவங்கள் மீது ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.