செம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செம்பட்டியில் 5 மணி நேரம் சாலை மறியல் போராட்டம்..
செம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வெள்ளிக்கிழமை இரவு வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செம்பட்டியில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 5 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த வீரக்கல்லில், வெள்ளைமாலை வீருமாறம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் ஒரு நாள் இரவு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த திருவிழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கரூர், சென்னை” கோவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு ஒரு நாள் இரவு தங்கி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்காக குளியல் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் குளிக்கும் போது வீரக்கல் அருகே வண்ணம்பட்டியை சேர்ந்த 4 இளைஞர்கள் தங்கள் மொபைல் மூலம் ஜன்னல் வழியாக போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து அந்தப் பெண் கூச்சலிட்டதால், பொதுமக்கள் அந்த 4 இளைஞர்களை கையும் காலவுமாக மடக்கிப் பிடித்தனர். அவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த செம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த 4 நபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தும் அவர்களை போலீசார் தப்பிக்க விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சேர்ந்த பெண்கள் பொதுமக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை 5 மணி நேரம், செம்பட்டி 4 ரோட்டில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் திண்டுக்கல் – தேனி, கொடைக்கானல் சாலை மற்றும் மதுரை – பழனி, கோவை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அனைத்து வாகனங்களும் சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி மாற்று பாதையில் சென்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனால், போராட்டக்காரர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து கலந்து சென்றனர்.
இந்நிலையில், விழா கமிட்டி தலைவர் திண்டுக்கல் ராமராஜ் என்பவர் செம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த, இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மேலும், திருவிழாவில் வீடியோ எடுத்த 4 இளைஞர்கள் இதுபோன்று திருவிழாகள் மற்றும் விசேஷ நாட்களில் கிராமங்களில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி, அவர்களைத் தேடி வந்த நிலையில், செம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்து வண்ணப்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் கல்லூரி மாணவர் நவீன் (20) இதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் அலெக்ஸ் மகன் பெத்தன்ராஜ் (17) ஆகியோரை கைது செய்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் இவர்களது நண்பர்கள், இதே ஊரைச் சேர்ந்த ஹரி மற்றும் விஷ்ணு ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.