திருப்பூரில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்! – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

திருப்பூரில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்! – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

 இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, நியூஸ்7 தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர்  நேசபிரபு மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முன்னதாக மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே காவல்துறையிடம் நேச பிரபு புகார் தெரிவித்துள்ளார். காவல்துறைக்கு அவசர உதவி எண் 100 மூலம் அவர் தொடர்ந்து அழைத்துள்ளார்.  இதற்கு பதிலளித்த காவலர் ஒருவர் ஸ்டேசன்ல ஆள் இல்லை. உங்களுக்கு பாதுகாப்பு வேணும்னா காவல் நிலையத்திற்கு வந்து விடுங்கள் என அலட்சியமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியே வந்த போது மர்ம நபர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து, குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையின் இத்தகைய அலட்சியம் கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு, அலட்சியமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்றதொரு மோசமான சூழல் நடைபெறாதவாறு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!