ராமநாதபுரத்தில் குடியரசு தின விழாவில் 57 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி.

இராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் மைதானத்தில் 72வது குடியரசு தின விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக்கொடி ஏற்றி வைத்து, அமைதியை வலியுறுத்தி வெள்ளை புறாக்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். ஆயுதப்படை காவலர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் தலா ரூ.17,036 செலவில் 22 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, தலா ரூ.12 ஆயிரம் வீதம் மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு நிவாரணம், தலா ரூ.22, 500 வீதம் 5 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்ட உதவி, முன்னாள் படை வீரர் ஒருவருக்கு கார்கில் நிவாரண நிதியில் இருந்து முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் ரூ.10 லட்சம் கருணை தொகை, மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தலா ரூ.3,934 மதிப்பில் 4 பேருக்கு இலவச தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, குடிசை மாற்று வாரியம் சார்பில் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் 5 பேருக்கு அனைவருக்கும் வீடு கட்டும் திட்ட நிதி ஆணை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இருவருக்கு தலா ரூ.61,950 வீதம் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், தோட்டக்கலை துறை சார்பில் தலா ரூ.28,088 வீதம் வேளாண் கருவி,வேளாண் துறை சார்பில் நெல் சாகுபடி போட்டியில் வென்ற இருவருக்கு தலா ரூ.12,500 வீதம் பரிசு தொகை வரைவோலை, மாவட்ட விளையாட்டு துறை சார்பில் தலா ரூ.4 ஆயிரம் வீதம் 4 பேருக்கு ரொக்கம் என 57 பயனாளிகளுக்கு ரூ.29. 59 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். வருவாய், காவல், சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நற்சான்று வழங்கி பாராட்டினார். காவல்துறை துணைத் தலைவர் என்.எம். மயில்வாகனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி, கூடுதல் ஆட்சியர் எம்.பிரதீப் குமார், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.ஷேக் முஹமது, காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!