இறைவனின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்ட ஷஹீதுகளைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் சொல்லும்போது அவர்களை மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என இயம்புகிறான்.
“இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை மரணித்தோர் என நீங்கள் கூற வேண்டாம்; மாறாக, (அவர்கள் “பர்ஜக்” எனும் மறைவான உலகில்) உயிரோடிருக்கிறார்கள்; எனினும் (அவர்கள் எவ்வாறு உயிரோடு உள்ளார்கள்? என்பதை) நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்”.(அல்குர் ஆன் – 2:154)
ஷஹீதுகளுக்கான இந்த சிறப்பான அந்தஸ்து குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, யார் அல்லாஹ்விடம் ஷஹாதத் மரணத்தை கேட்டு துஆ செய்கிறாரோ? அவருக்கு ஷுஹதாக்களின் அந்தஸ்துகளை அல்லாஹ் வழங்குகிறான்; அவர் தம் படுக்கையில் (இயற்கையாக) மரணித்த போதிலும் சரியே!(அறிவிப்பாளர்:சஹ்ல் பின் ஹுனைஃப்(ரலி), நூல்:முஸ்லிம்)
ஒரு மனிதனின் மரணத்தில் மிகவும் அந்தஸ்து கூடுதலான மரணம் ஷஹீது நிலை என்பதைத்தான் நாம் மேலே பார்த்துள்ள விடயங்களாகும்; இத்தகைய ஷஹீதான மரணங்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களுக்கு கிடைப்பதைப் போன்றே தற்போதைய “கொரோனா வைரஸ்” மூலம் உயிரிழக்கும் முஸ்லிம்களுக்கும் உண்டு என்பதை இஸ்லாம் தெளிவாக உணர்த்துகிறது.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் 5 வகையான மரணங்கள் ஷஹீது அந்தஸ்துகளை பெறுகிறது எனக்கூறியதாக ஹழ்ரத் அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்; 1) பிளேக் நோயால் இறந்தவர்கள், 2) காலரா நோயால் இறந்தவர்கள், 3) நீரில் மூழ்கி இறந்தவர்கள், 4) கட்டிடம் இடிந்து விழுந்து இறந்தவர்கள், 5) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் என்பதாகும்.(நூல்:புகாரி-முஸ்லிம்)
இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் பிளேக்,காலரா போன்ற எதிர்பாராத வைரஸ் நோயான கொரோனாவில் இறப்பவர்களுக்கும் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம்.
கொரோனா நோயால் இறந்தவர்களின் உடலை வெறுப்பவர்களுக்கு மத்தியில், அதை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யும் நமது சகோதரர்களின் சிந்தனையில் அந்த ஜனாஸா ஷஹீதுடைய அந்தஸ்து கொண்டது என்பது இடம் பெறும்.
கொரோனாவினால் இறந்த முஸ்லிம் உடல்களை மனிதன் பரிகாச பார்வையோடு பார்க்கிறான்; ஆனால் அவர்களை ஷஹீது உடலாக பார்க்கும் நல்லோர்களுக்கு மட்டுமே அல்லாஹ் அருள்பாலிக்கிறான்.
கொரானாவினால் மரணித்த மக்களை அல்லாஹ் பொருந்தி கொள்வானாக, அவர்களின் உடலை நல்லடக்கம் செய்த மக்களின் பாவத்தை மன்னித்து அவர்களுக்கு நோயற்ற நல்வாழ்வையும் நீடித்த ஆயுளையும் வழங்குவானாக என்று உங்களோடு சேர்ந்து நானும் இறைவனிடம் கையேந்துகிறேன்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி. (24.04.2020)

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









