தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே பொது மக்களை குளிக்க அனுமதித்து வரும் நிலையில், இரவு 8.00 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வனத் துறையினர் குளிக்க அனுமதித்து வருவதாக பொது மக்களிடயே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலிப்பது உள்ளிட்ட அத்து மீறல்களில் ஈடுபடும் வனத் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக நல ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி. சுடலை யாண்டி, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தி. உதய கிருஷ்ணன், சிபிஎம் தாலுகா செயலாளர் வேலு மயில், சிபிஐ தாலுகா செயலாளர் எம்.எஸ். கிட்டப்பா, விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேனி அருள் சிங், ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பழைய குற்றாலம் அருவியில் 65 ஆண்டுகளாக பொது மக்கள் 24 மணி நேரமும் குளித்தது போல் தொடர்ந்து பொது மக்களை இரவும் பகலும் குளிக்க அனுமதிக்க வேண்டும். பழைய குற்றாலத்தில் பணம் வசூலிப்பது உள்ளிட்ட அத்து மீறல்களில் ஈடுபடும் வனத் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பழைய குற்றாலம் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு உள்ள வனத்துறை சோதனை சாவடியை அப்புறப்படுத்த வேண்டும். இனி பழைய குற்றாலத்தில் எந்த வகையிலும் வனத் துறையினர் தலையீடு இருக்கக் கூடாது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் வரும் ஆகஸ்ட் 15 அன்று எங்கள் பகுதியில் அனைத்து கிராமங்களிலும் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவிப்பதோடு உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். அடுத்த கட்டமாக ஆயிரக் கணக்கான பொது மக்களை திரட்டி தடையை மீறி பழைய குற்றாலம் அருவியில் குளிக்கும் போராட்டத்தை விரைவில் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.
முன்னதாக, இரவு சுமார் 8.30 மணிக்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி. சுடலையாண்டி, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தி. உதயகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வேலு மயில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.எஸ். கிட்டப்பா, விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேனி அருள்சிங் ஆகியோர் தலைமையில் ஏராளமான பொது மக்கள் பழைய குற்றாலம் அருவிப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சுமார் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றது. அவை அனைத்தையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்த பொது மக்கள் அந்த வாகன ஓட்டிகளிடம் விசாரித்த போது, ஒவ்வொரு வாகனத்திற்கும் 2000 ரூபாய் வனத் துறையினர் பெற்றுக் கொண்டு எங்களை உள்ளே அனுமதித்ததாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இரவிலேயே பொது மக்களும் போராட்டக் குழுவினரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அருவிப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் அங்கிருந்து வெளியே செல்ல முடியாமல் தவித்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் போராட்டம் நடத்திய போராட்டக் குழுவினர் மற்றும் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நாங்கள் உரிய நடவடிக்கை மேற் கொள்கிறோம். இந்த இரவு நேரத்தில் பழைய குற்றாலம் அருவிப் பகுதியில் வாகனத்தில் ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறியதால் பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய குற்றாலம் அருவி 1960 ஆம் ஆண்டு பெருந் தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் உருவாக்கப் பட்டது. இந்தப் பழைய குற்றாலம் அருவி சுமார் 45 ஆண்டுகளாக பொதுப் பணித்துறை மற்றும் ஆயிரப் பேரி ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, சுகாதார வசதி, உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஆயிரப் பேரி ஊராட்சி மூலம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.