தென்காசி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 58). இவர் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து பெற்றோர், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். மேலும் மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி உடனடியாக நீலகண்டன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், நீலகண்டன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.