பாராளுமன்றத்தில் 22 மொழிகளில் எந்த மொழிகளிலும் உறுப்பினர்கள் இனி பேசலாம்..

பாராளுமன்றத்தில் 22 மொழிகளில் எந்த மொழிகளிலும் உறுப்பினர்கள் இனி பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இதுவரை, அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 17 மொழிகளை ஒரே நேரத்தில் மொழி பெயர்ப்பதற்கான வசதி மட்டுமே இருந்து வந்தது.  மீதமுள்ள காஷ்மீரி, டோங்ரி, கொங்கனி, சந்தலி, சிந்தி ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதனால், பாராளுமன்றத்தில் இந்த மொழிகளில் பேசும் உறுப்பினர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சமீபத்தில் இந்த ஐந்து மொழிகளுக்கான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 8- வது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள 22 மொழிகளில் எந்த மொழிகளிலும் உறுப்பினர்கள் இனி பேசலாம் என தெரிவித்துள்ளார். இதனை உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறினார்.

பாராளுமன்றத்தில் 17 மொழிகளுடன் இந்த காஷ்மீரி, டோங்ரி, கொங்கனி, சந்தலி, சிந்தி ஆகிய மொழிகளிலும் உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கமுடியும். மாநிலங்களவையின் முழு ஒத்துழைப்போடு மக்களவை இந்த வசதியை மேற்கொண்டுள்ளது.

உறுப்பினர்கள் எந்த மொழிகளிலும் பேசப்போகிறோம் என்பதை 24 மணி நேரத்திற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கூறினார். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!