ஆபரேஷன் சிந்தூர்! ஏன்? எதற்கு? எப்படி?

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த சாதாரண மக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்று இந்திய ராணுவ அதிகாரி சோபியா குரேஷி விளக்கம் அளித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

நமது ஆயுதப்படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம் என்றும், பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு – காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, சம்பா, கதுவா, ரஜௌரி, பூஞ்ச் ஆகிய ​​இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது. நமது ராணுவத்துடன், நமது தேசத்திற்காக தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை இந்திய ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்டபோது, இந்திய விமானப் படையின் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட விடியோக்களை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது.

பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. பஹல்காம் தாக்குதல் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனாலே, இந்தியா திருப்பி தாக்குதல் நடத்தியிருக்கிறது. பயங்கரவாதிகளின் வாழிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது.

இந்திய ராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து, பல்வேறு நகரங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு வரும் விமானங்களை இந்திய விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. ஸ்ரீநகர் உள்பட சில விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட்டுக்கு செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் நண்பகல் வரை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படைத் தளபதிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம். ஜெய்ஹிந்த்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய முப்படைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா (லஷ்கர் இ தொய்பா)

மர்கஸ் அப்பாஸ், கோட்லி (ஜெய்ஸ் இ முகமது)

மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி (ஹிஸ்புல் முஜாஹிதீன்)

ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் (லஷ்கர் இ தொய்பா)

சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் (ஜெய்ஸ் இ முகமது)

மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது)

மார்கஸ் தைபா, முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா)

சர்ஜால், தெஹ்ரா கலான் (ஜெய்ஸ் இ முகமது)

மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன்)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப். 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழுச் சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!