“டிஜிட்டல் கைது” ஆன்லைன் விசாரணை” எனும் பெயரில் மோசடியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து சென்னை சைபர் குற்றப்பிரிவு, தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, போலீஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றும் டிஜிட்டல் கைது சைபர் மோசடிகள் வியத்தகுமுறையில் உயர்ந்து வருகின்றன. இணையவழியில் அப்பாவி மக்களை தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், தங்களை அரசுதுறையின் அதிகாரிகள் போல அடையாளம் காட்டிக் கொள்வார்கள். சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டதாக சொல்லி பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்கள் வைப்பார்கள். அதை வைத்து மக்களுக்கு மிரட்டல் கொடுப்பார்கள். பின்னர் பணப்பயன் பெறுவார்கள்.
அந்த வகையில், மனுதாரர் ஒருவருக்கு போலீஸ் அதிகாரிகள் பேசுவதாக ஒரு போலியான தொலைபேசி அழைப்பு வந்தது. அவர், ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தி பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக பொய் கூறினார். நம்பகத்தன்மையை பெற, கைது வாரண்டின் போலி நகலை அனுப்பி, மனுதாரரை ஆன்லைன் விசாரணைக்கு உட்படுத்தினார்கள். பின்னர், அவர் வங்கிக் கணக்கிலிருந்து “மேற்பார்வை கணக்கு” என்ற பெயரில் ஒருவங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு கட்டளையிட்டனர். இவர்களை நம்பிய மனுதாரர், பயத்தில் இந்த உத்தரவுகளை பின்பற்றி மோசடி செய்பவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ₹3.84 கோடி பணம் மாற்றினார். பின்னர் தான், அவர் மோசடிக்கு உள்ளாகியிருப்பதை உணர்ந்தார். இவ்வழக்கு தொடர்பான புகாரின் அடிப்படையில், SCCIC (State Cyber Crime Investigation Centre), சென்னை தலைமையகத்தில் Cr.No. 75/2024-ல். பிரிவு 318(4), 336(3), BNS-2023 மற்றும் IT (திருத்தம்) சட்டம் 2008 இன்பிரிவு 66C, 66D ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்:
1. மாதங்கி ஹரிஷ் பாபு (வயது 34), தனது வங்கிகணக்கை விற்றதற்காக ₹1 லட்சம் பெற்றார்.
2. லோகேஷ் (வயது 30), திருவள்ளூர், TNHB அயப்பாக்கத்தில் வசிப்பவர், இரண்டு வங்கிக் கணக்குகளை வழங்கியதாக ஒப்புக் கொண்டார்.
3. எஸ். அப்ரோஸ் (வயது 31), சென்னை காவங்கரையில் வசிப்பவர். சட்டவிரோத பணத்தை வரி ஏய்ப்பு நோக்கில் மாற்ற வர்த்தக நிறுவனங்களை பயன்படுத்தினார்.
பொதுமக்களுக்கான சைபர் கிரைம் அறிவிப்பு:
1. மோசடி அழைப்புகள் குறித்து குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப் படுகிறார்கள். குறிப்பாக போலீஸ் அதிகாரிகள், கூரியர் சேவைகள் அல்லது நிதி நிறுவனங்களாகக் கூறி தொலைபேசியில் அழைப்பவர்களை நம்பாதீர்கள்.
2. உண்மைத் தன்மையை சரிபார்க்காமல் தனிப்பட்ட தகவல்களை ஒரு போதும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது குற்றவியல் விளைவுகளின் அச்சுறுத்தலின் கீழ் நிதியை மாற்றவோ வேண்டாம்.
3. உங்கள் வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் இயக்க அனுமதிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படலாம்.
4. அறியப்படாத ஆப்களை பதிவிறக்கவோ அல்லது அந்நியர்கள் அனுப்பிய சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளை கிளிக் செய்யவோ வேண்டாம். ஏனெனில் அவை உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி தரவுகளை திருடி மோசடி செய்பவையாக இருக்கலாம்.
5. உங்கள் தொலைபேசியைப் பாதுகாப்பாக வைத்திருங்கள், மேலும் சரிபார்க்கப்படாத மூலங்களிலிருந்து APK பயன்பாடுகள் அல்லது பிறமென் பொருள்களை நிறுவுவதைத் தவிர்க்கவும்.
6. ஆப்ஸ் நிறுவ அதிகாரப்பூர்வ ஆப்ஸ்டோர்களை மட்டுமே பயன்படுத்தவும்.
7. உங்கள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைப் புகாரளியுங்கள்.
மோசடி குறித்து புகார் செய்ய: இப்படியான மோசடிகள் குறித்து புகார் செய்ய 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கவும்.
You must be logged in to post a comment.