தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படவில்லை.குறிப்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட
அனைத்து தேர்வுகளும் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை தனியார் பள்ளிகளும் ஒருசில அரசு பள்ளிகளும் ஆன்லைனில் நடத்தி வருகின்றன.இந்த ஆன்லைன் வகுப்பு குறித்து சில விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆன் லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது நினைவிருக்கலாம்.இந்நிலையில், தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 வகுப்புகள், 9 முதல் 12ம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என நான்கு வகுப்புகள், எல்கேஜி – யூகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்பு குறித்த மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..
எழுதியவர்: mohan July 15, 2020, 9:41 am




You must be logged in to post a comment.