17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை போன்ற நிலை மதுரையில் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை.. பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை.. அமைச்சர் பேட்டி..

சென்னை போன்ற நிலை மதுரையில் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை.. பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை.. அமைச்சர் பேட்டி..

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2020, 9:28 pm

சென்னை போன்ற நிலை மதுரையில் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது.

மதுரையை பொறுத்தவரை கொரோனோ சமூக பரவலாக மாறவில்லை என மதுரையில் மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்திற்கு பின் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. மதுரையில் கொரோனா கொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 3 அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மதுரை உலக தமிழ் சங்க கட்டிடித்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்கு மணி, கொரோனா சிறப்பு மருத்துவ அதிகாரி மருதுபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் மூன்று தமிழக அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் சற்று அதிகம் உள்ளது கவலை அளிக்கிறது. இந்திய அளவில் தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அளவில் இன்று ஒருநாள் மட்டும் 34,805 பேருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரையில் அரசு மருத்துவமனை கொரோனோ வார்டு 1400 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. மதுரையில் தேவையான மருத்துவ கட்டமைப்புகள் உள்ளது. மதுரை மாவட்டத்திற்கு தேவையான வசதியை செய்ய சுகாதார துறை தயாராக உள்ளது. மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை அதே நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் 1800 படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளது. கொரோனோ வைரஸ் மட்டுமே எதிரி கொரோனோ நோயாளி எதிரியல்ல. மன நல மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து கொரோனோ பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் தமிழகத்தில் குறைந்த அளவாக உள்ளது. தமிழகத்தில் இறப்பு சதவீதம் 1.3 அளவாகவே உள்ளது. பரிசோதனை அதிகப்படுத்துவதும், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் கொரோனோ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையில் பொது முழு முடக்கம் நீட்டிப்பது குறித்து மருத்துவ குழு ஆலோசனை செய்து முதல்வர் முடிவு எடுப்பார். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் முழு ஆடை அணிந்தாலும் அவர்களுக்கு கொரோனோ பாதிக்கப்பட்டு வந்தாலும் உயிரை துச்சமென கருதி பணி செய்து வருகின்றனர். மதுரையை பொறுத்தவரை கொரோனோ சமூக பரவலாக மாறவில்லை. தமிழக அரசு கொரோனோ தடுப்பு நடவடிக்கையை கவனமாக கையாண்டு வருகிறது.

சென்னை போன்ற நிலை மதுரையில் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது, பிளாஸ்மா சிகிச்சைக்கு தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து சென்றவர்கள் முன்வர வேண்டும். மத்திய அமைச்சமே தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பாராட்டி உள்ளது என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!