வெளிநாடுகளிலிருந்து தமிழக மக்களை விரைந்து அழைத்து வர கோரி இணைய வழி போராட்டம் நடைபெற உள்ளதாக தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.இது குறித்து தவ்ஹீத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாடுகளில் இருக்கும் தமிழக மக்களை தாயகம் அழைத்து வருவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாதங்களாக தமிழகம் வரமுடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.கம்பெனிகள் மூடப்பட்டதால் தொழிலாளர்களாக பலர் சாலைகளில் படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
தமிழகம் வருவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து மாவட்ட தழுவிய இணைய வழி ஆர்ப்பாட்டம் நாளை காலை 10.30 மணி முதல் 10.45 வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வெளிநாடுகளில் இருக்கும் தமிழக மக்களை விரைந்து அழைத்து வரவேண்டும் தமிழகம் வருவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய பதாகைகள் ஏந்தி சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து ஆண்கள்,பெண்கள் என அனைவரும் குடும்பத்துடன் அவரவர் வீட்டு வாசல் முன்பு பங்கேற்கின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர்,தென்காசி, செங்கோட்டை, அச்சன்புதூர்,வடகரை, புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், வீராணம், பொட்டல்புதூர் உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என மாவட்ட தலைவர் ஜலாலுதீன் தெரிவித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.