அருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தினை விளக்கும் விதமாக, ஆண்டு தோறும் மே 18 சர்வதேச அருங்காட்சியக தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை 1977 முதல் சர்வதேச அருங்காட்சியக சங்கம் நடத்துகிறது. “சமத்துவத்திற்கான அருங்காட்சியகங்கள் – அதன் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம்” என்பது 2020ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும்.கொரொனா ஊரடங்கு காரணமாக, சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இந்தாண்டு கோயில் கட்டடக்கலை – ஓர் அறிமுகம் என்ற பயிற்சிமுகாம் இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து வாட்ஸ்அப் செயலி மூலம் 08.5.2020 முதல் 18.5.2020 வரை 11 நாட்கள் இப்பயிற்சியை நடத்தின. பயிற்சியை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு நடத்தினார்.கோயில்களின் தோற்றம், அதன் அமைப்பு, விமானம், கோபுரம் இவற்றின் உறுப்புகள் அவற்றின் வகைகளை பாண்டிய நாடு, சோழநாட்டுக் கோயில்களின் 300க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் விளக்கிக் கூறினார்.
கோயில் படங்களில் அதன் உறுப்புகளின் பாகங்கள் குறித்து விளக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அவர்கள் கற்றுக்கொண்டவற்றிலிருந்து வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. கோயிலின் பாகங்களை வரைந்து அவற்றின் பெயர்களைக் குறித்தல், கோயில் அமைப்பை விளக்கி கட்டுரை எழுதுதல் ஆகிய செயல்பாடுகளில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று பயின்றுள்ளனர்.இப்பயிற்சியில் திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மகளிர் கல்லூரி மாணவி, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி, தொல்லியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் வி.சிவகுமார், இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அடுத்த கட்டமாக தமிழ் பிராமி கல்வெட்டுகள் படிக்கும் பயிற்சியும் இணைய வழியில் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.







You must be logged in to post a comment.