ராமநாதபுரம், பரமக்குடி, பாம்பன், சித்தார்கோட்டை பகுதியில் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதித்த தூய்மை பணியாளர்கள், மீனவர்கள் உள்பட ஏழை, எளியோருக்கு நிவாரண பொருட்களை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வழங்கினார். தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கார்த்திக் சிதம்பரம் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு ஹிந்தி பேசும் மாநிலங்களின் நலனில் மட்டும் அதிக கவனம் செலுத்துகிறது, ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை. அதன் அடிப்படையில் தான் தமிழகத்துக்கு மிக குறைந்த நிவாரண நிதி ஒதுக்கியுள்ளது.
அதிமுக, பாஜக கட்சிகள் இணக்கமாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கூட கேட்டு பெற இயலவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. கொரானா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு என்பது தேவை. ஆனால் பொருளாதாரம் பாதிக்காத அளவு ஊரடங்கை. திட்டமிட்டிருக்க வேண்டும். ஏற்கனவே, நலிந்துள்ள இந்திய பொருளாதாரம் ஊரடங்கு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை திட்டமிட்ட அரசு அதனை எப்படி எதிர் நோக்க வேண்டும் என திட்டமிட்டு தனி நபர்கள், தொழில் புரிபவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலாக்கதிற்கு முன் நிவாரண தொகை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.வெளி நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்கள் தங்களது பயண செலவை தாங்களே செலுத்தி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பயண தொகையை செலுத்த முடியாத நூற்றுக்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் வெளி நாடுகளில் வேலைக்கு சென்ற ஒவ்வொரு இந்திய குடிமகனையும், இந்திய அரசு தனது சொந்த செலவில் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர கால நேரங்களில் எதிர்கட்சிகளின் ஆக்க பூர்வ ஆலோசனைகளை ஆளும் கட்சியினர் ஏற்று செயல்பட வேண்டும் என்றார்.







You must be logged in to post a comment.