ரமலான் காலங்களிலோ அல்லது மற்ற நாட்களிலோ நமது தவறுகள் குறித்து அல்லாஹ்விடம் முறையிடுவதற்கு முன்பு நம்மால் சக மனிதருக்கு நிகழ்ந்திருக்கும் உரிமை மீறல்கள் குறித்து உணர்வதும், பின்னர் அதற்காக சம்பந்தப்பட்ட மனிதரிடம் போய் மன்னிப்பு கோருவதையும் தான் அல்லாஹ் விரும்புகின்றான்.
நாம் சக மனிதர் விசயத்தில் செய்யக்கூடாதவைகளை புரிந்து கொண்டால் போதும், யாரும் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டோம்.
மற்றவரின் உயிர் மற்றும் உரிமையை பறிப்பது, அடுத்தவரை கேலி செய்வது, அடுத்தவரின் மீது அவதூறு கற்பிப்பது, பட்டப்பெயர் சூட்டி இழிவுபடுத்துவது, புறம் கூறுவது, தரக்குறைவாக பேசுவது, கோள் மூட்டுவது, அனுமதியின்றி அடுத்தவர் வீட்டுக்குள் நுழைவது.
பிற சமய உணர்வுகளைப் புண்படுத்துவது, அடுத்தவரின் பொருட்களை அபகரிப்பது, அனாதைகளை விரட்டியடிப்பது, அனாதைகளின் சொத்துக்களை திருடுவது, வட்டியை ஊக்குவிப்பது, வரதட்சணையை விரும்புவது போன்ற விசயங்கள் அனைத்துமே பிற மனிதருக்கு நாம் செய்யும் தீமைகளே.
அரசு நிலத்தையோ அல்லது அடுத்தவரின் நிலத்தையோ அபகரிப்பது. வியாபாரத்தில் மோசடி செய்வது, கலப்படம் செய்த பொருட்களை விற்பனை செய்வது போன்ற செயல்கள் யாவும் மனிதருக்கு நாம் செய்யும் தீங்குகளாகும்.
இவற்றில் எதையெல்லாம் யாருக்கெல்லாம் நாம் செய்திருப்பதாக நமது மனசாட்சி சொல்கிறதோ, அவைகளை உணர்ந்து உரியவரிடம் போய் அதற்கான மன்னிப்பு கோருவதே நாளைய நமது மறுமை வாழ்வுக்கு நன்மையை தருவதாக இருக்கும்.
அடுத்தவரின் அமானித பொருட்களான நிலம்,பணம்,நகை,வாகனம் எதுவாயினும் அதனை திரும்ப கொடுத்துவிட்டு அவரிடம் மன்னிப்பு கோரவேண்டும்.
ஒருவேளை அடுத்தவரிடம் அபகரித்த பொருட்களை அழித்திருந்தால் அது குறித்த விபரத்தை பாதிக்கப்பட்ட நபரிடம் எடுத்துச்சொல்லி தற்போதைய தமது வறுமையை சுட்டிக்காட்டி அவரிடம் மன்னிப்புக் கோருவதே நல்லது.
பாதிக்கப்பட்டவன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதால் தான் அநீதியிழைக்கப்பட்ட மனிதனை தேடிச்சென்று முதலில் அவனிடம் மன்னிப்பு கோருவதை அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
சக மனிதன் விசயத்தில் நாம் செய்த தவறுகளை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்ட பின் அல்லாஹ்விடமும் மன்றாடி தவ்பா செய்து நமது உள்ளங்களை தூய்மைப்படுத்துவோம்.
குகைக்குள் சிக்கிய மூவர் மன்னிப்பின் மூலம் மீண்டது எப்படி? என்பதை இன்ஷா அல்லாஹ்….
ரமலான் சிந்தனை – 21ல் காணலாம். -கீழை ஜஹாங்கீர் அரூஸி.




You must be logged in to post a comment.