17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மஹாராஷ்டிராவில் ரயில் தண்டவாளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு:-வைகோ இரங்கல்..

மஹாராஷ்டிராவில் ரயில் தண்டவாளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு:-வைகோ இரங்கல்..

எழுதியவர்: Askar May 8, 2020, 1:45 pm

மஹாராஷ்டிராவில் ரயில் தண்டவாளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு:-வைகோ இரங்கல்..

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளதால், நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு சிராமிக் எனப்படும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 5 நாட்களில், 83 சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், வெளிமாநில தொழிலாளிகள் சிலர் நடந்தே சொந்த ஊர் சென்ற வண்ணம் உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு நடந்து சென்ற வெளி மாநில தொழிலாளர்கள் மகாராஷ்டிரா மாநிலம் – அவுரங்காபாத் கர்மத் அருகே தூக்கம் காரணாமாக தண்டவாளத்தில் தூங்கியுள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில் அந்தத் தண்டவாளத்தில் சென்ற காலி சரக்கு ரயில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மீது ஏறியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது.

வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாகத் திரும்புவதற்கு மத்திய – மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை மேலும் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்தக் கோரச் சம்பவம் உணர்த்துகிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு மத்திய அரசும், மகாராஷ்டிரா அரசும் நிதி உதவி அளிக்க வேண்டும்.

ஆந்திராவில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால், கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 11 அப்பாவி பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்கள். உயிர் பிழைக்க ஓடிய பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே மயங்கி சுருண்டு விழுந்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்புகளுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிய வருகிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆந்திர மாநில அரசு ஒரு கோடி ரூபாய் கருணைத் தொகை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

மனிதத் தவறால் ஏற்பட்ட இந்த விபத்தில் ஆடு, மாடுகளும், பறவைகளும் உயிர் தப்பவில்லை. கொரோனா பாதிப்புக்கு இடையே இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிர்ப்பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க ‘தாயகம்’ சென்னை – 8 08.05.2020

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!