இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 300ஐ தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 980ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பலியானோரின் எண்ணிக்கையும் ஆயிரத்து 301 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 28 ஆயிரத்து 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுவரை மருத்துவ சிகிச்சையில் 10 ஆயிரத்து 633 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், குஜராத் 2ம் இடத்திலும், டெல்லி 3ம் இடத்திலும் உள்ளன.
மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி, 12 ஆயிரத்து 296ஆக அதிகரித்துள்ளதோடு, பலி எண்ணிக்கை 521ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்து 5 ஆயிரத்து 54ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 262ஆக உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி 4 ஆயிரத்து 122ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 64ஆக கூடியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோயிலிருந்து 10 ஆயிரத்து 633 பேர் குணமடைந்துள்ளனர். அதில் மகாராஷ்டிராவில் 2 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் ஆயிரத்து 341 பேரும், டெல்லியில் ஆயிரத்து 256 பேரும் குணமடைந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 2,644 பேருக்கு நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 24 மணி நேரத்தில் 83 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சம் என சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.




You must be logged in to post a comment.