தமிழக சுகாதாரத்துறைக்கு கோரிக்கை!
தற்போது நாடு முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயல்படும் விதம் குறித்து பாராட்டுகிறேன்.
கொரோனா தொற்றுள்ள நபர் என்று அடையாளம் காட்டப்படுபவர்களை தனிமைப்படுத்துவதையோ? அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதையோ? யாரும் குறை சொல்லாத நிலையில் அவர்களின் பெயர்,அலைபேசி எண், விலாசம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொது மக்களின் பார்வைக்கு கொடுப்பது ஏற்புடையது தானா? என்பதை அதிகாரிகளின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.
கொரோனா தொற்றுள்ளவர்களின் நோயை குணப்படுத்துவதில் காட்டும் அக்கறையை விட அவர்களை பொது சமூகத்தில் அடையாளம் காட்டும் அக்கறை மிகைத்து விட்டதாக பலரும் வேதனைப்படுகின்றனர். இதன் பாதிப்பு நோயாளிகள் குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பும் போதும் எதிரொலிப்பதை
காணமுடிகிறது. இவர் கொரோனா நோயாளியாம்னு குணமடைந்த பின்னரும் அவரை விலக்கி வைத்து பார்க்கும் தீண்டாமையை நினைத்து பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் துளிகள் சாப மழையாய் மாறி விடக்கூடாது என அஞ்சுகிறேன்.
நோயாளிகளின் எண்ணிக்கையை சொல்வதில் தப்பில்லை, அதை மாவட்ட ரீதியிலான எண்ணிக்கையாகவே வெளிப்படுத்த வேண்டுமே தவிர ஒவ்வொரு குக்கிராமம் வரை பெயரை குறிப்பிட்டு நோயாளிகளின் முழு விபரத்தையும் பொதுவெளியில் விளம்பரப்படுத்துவதை ஏற்க முடியவில்லை. இதுவும் ஒருவகையில் தீண்டாமை மற்றும் தனி மனித உரிமை மீறல் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
நோயாளிகள் குறித்த முழு விபரமும் அரசு நிர்வாகத்திற்கானதே தவிர பொதுவெளியில் விளம்பரப்படுத்திடுவதற்கல்ல, என்பதை புரிந்து இனிவரும் காலத்தில் நோயாளிகள் குறித்த முழு விபரத்தையும் பொதுவெளியில் பகிர வேண்டாமென்று அரசையும் அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி முன்னாள் கவுன்சிலர்




You must be logged in to post a comment.