சர்வாதிகாரத்தில் ஜனநாயகத்திற்கு இடமே இருக்காது என்பது தெளிவு. ஜனநாயகத்தில் அதன் வாய்ப்புகளைப் பயன்படுத்தியே சர்வாதிகாரம் செலுத்த முடியும். உள்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.
கொரோனா சிகிச்சை மருந்துக்காகவும் தடுப்பு மருந்துக்காகவும் உலகம் முழுவதும் மருத்துவ அறிவியலாளர்கள் முன்னெப்போதையும் விட முனைப்போடு ஆராய்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் – ஒவ்வொரு படியாய் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இவர்களது பணிகளை ஒருங்கிணைக்கிற, வேண்டிய தகவல்களைப் பகிர்கிற, தேவைப்படும் உதவிகளைச் செய்கிற முக்கியமான பொறுப்பை மேற்கொண்டிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்த நேரத்தில் அந்த நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்துகிறார் டொனால்டு டிரம்ப். கொரோனா இழப்புகளில் அமெரிக்கா உலகிலேயே முதலிடத்திற்கு வந்துவிட்டது என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கிற நேரத்தில் டிரம்ப்பின் இந்த ஆணை பற்றிய செய்தியும் வருகிறது.
மற்ற நாடுகளிலும் நிலைமை மோசமாகட்டும் என்று டிரம்ப் ஆசைப்படுகிறாரா? சீனாவுடன் பிரச்சினை என்றால் அதைத் தீர்த்துக்கொள்ள இதுவா வழி? இதுவா நேரம்?
எப்படியோ அமெரிக்க மோகமும், அதிபர் மயக்கமும் கலைவது நல்லதுதான். அமெரிக்க மக்களும் விடுதலை பெறட்டும் – கிருமியின் வெறியாட்டத்திலிருந்தும், அரசியல் அடாவடியிலிருந்தும்.
-குமரேசன்




You must be logged in to post a comment.