காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதும் முதலில் மதுபானகடைகளில் பார்கள் மூடப்பட்டன. இதை அடுத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டன . ஆனால் மதுபான குடோன்களில் இருந்து மதுபானங்களை எடுத்து சென்று அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் . இதையடுத்து மாவட்ட கலால் துறையினர் மதுபான குடோன்களையும் மூடி சீல் வைத்தனர். இதனால் காரைக்காலில் மதுபானங்கள் முற்றிலும் தடைபட்டது. மது பிரியர்கள் கவலைக்கு ஆளானார்கள்.
மேலும் குடோன்களில் இருந்து மதுபானங்கள் எடுத்து விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான குடோன்களில் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்தெந்த வகை மதுபானங்கள் எவ்வளவு இருக்கிறது என்கிற கணக்கை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். நகரப்பகுதியில் காரைக்கால் வட்டாட்சியர் முத்து தலைமையில் அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள 18 குடோன் களிலும் மதுபானங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென இரண்டு வட்டாட்சியர்கள் தலைமையிலான 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியரும், கலால்துறை துணை ஆணையருமான ஆதர்ஷ் – ன் உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே காரைக்காலில் மதுபானங்கள் கிடைக்காத காரணத்தால் காரைக்காலை சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளில் இருந்து மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக குறைந்த விலைக்கு மதுபானங்கள் கிடைத்ததால் காரைக்காலில் இருந்து தான் தமிழக பகுதிகளுக்கு மதுபானங்கள் கடத்தப்பட்டன. ஆனால் தலைகீழ் மாற்றமாக தற்போது தமிழக பகுதிகளில் இருந்து காரைக்காலுக்கு கள்ளத்தனமாக மது கொண்டுவரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்









You must be logged in to post a comment.