தமிழகம் வந்திருந்த 4 பெண்கள் உட்பட 8 இந்தோனேஷியர் உள்பட 11 பேர் மீது எவ்வித முகாந்திரமும் இன்றி தமிழக காவல் து றை வழக்குப்பதிந்து கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது. தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு முன் இந்தோனேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்தவர்கள், தற்போது மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது மற்றும் அனைத்து வெளிநாட்டு விமான சேவை ரத்தால், அவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர். ஓட்டல்கள் உள்ளிட்ட விடுதிகள் மூடப்பட்டதால் அவர்கள் தங்க இடமின்றி இராமநாதபுரம், பாரதி நகர் மர்க்கஸ் எனும் வழிபாட்டுத்தலத்தில் தங்கி வந்தனர்.அவர்களுடைய ஆவணங்கள் மற்றும் முறையான தகவல்கள் மாவட்ட காவல் துறையிடம் மர்க்கஸ் நிர்வாகம் சார்பாக தினமும் சமர்ப்பிக்கப்பட்டது.காவலர்நவநீத கிருஷ்ணன் இந்தோனேஷியர் தொடர்பான ஆவணங்கள் மற்றும் முழு தகவல்களை முறைப்படி மர்க்கஸ் நிர்வாகத்திடம் பெற்றுக்கொண்டார்.
இச்சூழ்நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என உறுதியாக பின் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அதிலும் நோய் தொற்று இல்லை என உறுதியாகி விட்டது.இரு முறை பரிசோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று இல்லை என முடிவு வந்த பின்னரும் நோய்த்தொற்றை பரப்பினர் என எவ்வித முகாந்திரமும் இன்றி பொய்யான குற்றச்சாட்டை கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.அவர்களுக்கு நோய் தொற்று இல்லாத போது அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு பரப்ப முடியும்? எனவே இது மனிதாபிமானமற்ற செயல். சுற்றுலா விசாவில் வந்து மத பிரசாரம் செய்ததாக மற்றொரு பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் எந்த மதத்தினரிடமாவது மதப் பிரசாரம் செய்தனர் என யாராவது புகார் அளித்துள்ளனரா?பிற மதம் சார்ந்தோரிடம் இவர்கள் மதப்பிரசாரம் செய்ததாக காவல்துறை ஏதேனும் ஆதாரம் வைத்துள்ளதா?
எவ்வித முகாந்திரமும் இன்றி இவ்வழக்கு எப்படி போடப்பட்டது? மற்றொரு வழக்காக ஊரடங்கு உத்தரவை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய பின் இவர்கள் ஏதாவது பொது இடத்தில் ஒன்று கூடினரா?ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனரா?அப்படி எந்த குற்றச்சாட்டும் இல்லாதபோது எதற்காக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்?அவர்களின் மீது எவ்வித முகாந்திரமும் இல்லாதபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டிய, அவர்களுக்கான உதவிகளை செய்யவேண்டிய தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் படி தண்டனை வழங்கப்படாத விசாரணை கைதிகளையே இப்பேரிடர் காலத்தில் சிறையில் வைக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் இருக்கும்பொழுது, எவ்வித முகாந்திரமும் இல்லாதோரை சிறையில் அடைத்தது யாரை திருப்தி அடைய செய்திருக்கிறது தமிழக அரசு என்ற சந்தேகம் எழுகிறது. மலேசியா உட்பட பல்வேறு நாடுகளில் விமானங்கள் ரத்தால் தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்கள் அந்தந்த நாட்டு அரசுகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை பல்வேறு நாடுகள் வழங்கி வருகின்றன.பல்வேறு நாடுகளில் நம்முடைய மக்களை உபசரித்து வரும்பொழுது வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை நம்முடைய அரசு இப்படி துன்புறுத்துவது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயலாகும்.அப்படி ஏதேனும் விதி மீறலில் அவர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களை அவர்களின் நாட்டிற்கு அனுப்பும் வேலையை செய்ய வேண்டுமே தவிர, இப்பேரிடர் காலத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வது கண்டனத்துக்குரியது.இத்தகைய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிடவேண்டும்.கொரோனா பேரிடர் என்பது அனைவரும் இணைந்து போராட வேண்டிய களம். அதில் இதுபோன்ற காழ்ப்புணர்ச்சிகளால் ஒரு சாராரை குறி வைத்து எந்த வித முகாந்திரமும் இன்றி நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்குரியது,இது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு ஆக்கபூர்வ செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்தார்.




You must be logged in to post a comment.