வாணாபுரம் பகுதியில், கிர்ணிப்பழங்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடும் இழப்பு – 144 தடை உத்தரவு எதிரொலி!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வகையில் கரும்பு, நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு அதனை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் கோடை காலம் தற்போது தொடங்கி இருப்பதால் அதற்கு ஏற்றாற்போல் விவசாயிகள் வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி பழம் உள்ளிட்ட பழ வகை பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு அதனை பராமரித்து வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சிறு, குறு விவசாயிகள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கிர்ணிப்பழம் பயிரிட்டு அதனை பராமரித்து வந்தனர். தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் பழங்களை பறித்து வெளி மாவட்டங்கள் மற்றும் சந்தைகளுக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் 144 தடை உத்தரவால் பழங்களை கொண்டு சென்றாலும் வாங்குவதற்கு ஆளில்லாத சூழல் உள்ளது.
இதனால் பல ஆயிரம் செலவு செய்த நிலையில் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தது மட்டுமல்லாமல் வாழ்வாதாரமே இழந்த நிலையில் உள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.
செய்தியாளர் செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.