17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்தியாவெங்கும் மருத்துவ சேவைகள் இலவசமாக்கப்பட வேண்டும்- அ.முத்துக்கிருஷ்ணன்… அரசாங்கம் சிந்திக்க ஒரு பதிவு..

இந்தியாவெங்கும் மருத்துவ சேவைகள் இலவசமாக்கப்பட வேண்டும்- அ.முத்துக்கிருஷ்ணன்… அரசாங்கம் சிந்திக்க ஒரு பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2020, 12:28 pm


இந்தியாவில் கொரோனா தன் காலை பலமாக பதித்துவிட்டால் அதனை சமாளிப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு நம்மிடம் இல்லை தான், கொரோனாவால் 30 கோடி பேர் பாதிக்கப்படுவார்களா அல்லது 30 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்களா என்பதை எல்லாம் பிறகு விவாதிப்போம், ஆனால் நேற்று (22/03/2020) மாலை வட இந்தியாவின் நகரங்கள் அனைத்திலும் நடந்த பெரும் கொண்டாட்டங்கள், கர்பா நடனங்கள், வாத்திய இசை முழங்கும் ஊர்வலங்கள், இருசக்கர வாகன அணிவகுப்புகள், பட்டாசு வெடிப்புகள், இன்னும் இந்தியர்களுக்கு இந்த நோய் குறித்து ஒரு சுக்கும் தெரியவில்லை என்பதை மட்டும் அப்பட்டாமாக காட்டிச் சென்றது.

உலகமே கோருகிற SOCIAL OR PHYSICAL DISTANCING என்றால் கிலோ என்ன விலை என்றார்கள் இவர்கள், இவர்கள் மட்டும் அல்ல இந்த நோய் தொற்றின் தொடக்கம் முதலே மாட்டு மூத்திரம், மாட்டுச் சானம் மருந்து என்றார்கள், கொரோனா கோ கொரோனா கோ என்று கோஷம் போட்டார்கள், 12-14 மணி நேரத்தில் இந்த கிருமி செத்து விடும் என்றார்கள், கோவில் மணி சத்தத்தில் கிருமிகள் சாகும் என்றார்கள். சங்கிகளின் தலைமை முதல் தெருவில் நடனமாடும் அவர்களின் தொண்டன் வரை ஒருவருக்கு இந்த நோயின் தீவிரம் புரியவில்லை என்பது மட்டும் வெளிப்படையாக புரிகிறது.

இந்த லட்சனத்தில் இந்த நோய் குறித்து வெளிப்படையாக பேசும் மருத்துவர்கள் முதல் அரசின் மெத்தன போக்கை விமர்சிக்கும் நபர்கள் வரை அனைவரையும் மிரட்டியும் வருகிறார்கள். நாங்கள் அமைதியாக இருப்பதால் நோயின் தீவிரம் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் நாங்கள் கரடியாய் கத்துவது உங்களுக்கு இந்த கிருமி சினாவிலும் இத்தாலியிலும் செய்ததை உணர்த்தவே.

ஒரு பெரும் நோய் தொற்றின் நிழலில் இந்தியா எப்படி இந்த நிகழ் காலத்தை கடக்க போகிறது என்பது மனதில் பெரும் அச்சமாக உள்ளது. இன்று நாம் விழிக்கவில்லை என்றால் இந்த தேசமே இல்லாமல் போகும், இந்த இழப்பை இந்தியாவை போன்ற இத்தனை குறைவான அந்நிய செலவானியுடனான தேசத்தால் தாக்கு பிடிக்க இயலாது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, வரலாறு காணாத விலைவாசி உயர்வு என மூன்று பெரும் அலைகள் இந்தியர்களின் சேமிப்புகளை எல்லாம் நக்கி தின்று முடித்த வேளையில் அடுத்த கட்டமான இந்த கிருமியின் அலையை தாக்குபிடிக்க இயலாது.

இந்த நோய் தொற்று முடியும் வரை இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ சேவைகள் தேசியமயமாக்கப்பட வேண்டும், இந்தியா முழுவதும் அடுத்த ஒரு வருடத்திற்கு மருத்துவம் இலவசமாக பார்க்கப்பட வேண்டும் இந்தியாவின் சாமானியரக்ளால் இந்த பெரும் கிருமி அலையை எதிர்கொள்ள இயலாது.

குறிப்பு:-எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் முகநூல் பக்கத்தில் இருந்து …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!