17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணிநிரந்தரம் வேண்டி பகுதிநேர ஆசிரியர்கள் கருணை மனு! கவர்னர், முதல்வர், துணைமுதல்வர், கல்விஅமைச்சர், கருணை காட்டுவார்களா..?

பணிநிரந்தரம் வேண்டி பகுதிநேர ஆசிரியர்கள் கருணை மனு! கவர்னர், முதல்வர், துணைமுதல்வர், கல்விஅமைச்சர், கருணை காட்டுவார்களா..?

எழுதியவர்: Askar March 23, 2020, 8:53 am

பணிநிரந்தரம் வேண்டி பகுதிநேர ஆசிரியர்கள் கருணை மனு! கவர்னர், முதல்வர், துணைமுதல்வர், கல்விஅமைச்சர், கருணை காட்டுவார்களா..?

8 கல்விஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கி உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி போன்ற கல்விஇணைச்செயல்பாடு பாடங்களில் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

9வது கல்வியாண்டு முடியவுள்ள நிலையில் இவர்களுக்கு தற்போதுவரை ரூ.7 ஆயிரத்து 700 மட்டுமே தொகுப்பூதியமாக கிடைக்கிறது. நியமனம் செய்யப்பட்ட 16549 பேரில் 5ஆயிரம் காலியிடங்கள் ( மரணம், பணிஓய்வு, பணிராஜினாமா) ஏற்பட்டு தற்போது 12ஆயிரத்திற்கும் குறைவான பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாக தெரிகிறது.

10வது கல்வியாண்டு வரும் ஜீன்-2020ல் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆசிரியர்களுக்குரிய பணிநிரந்தரம், ஊதியஉயர்வு போன்ற பணிசார்ந்த கோரிக்கைகைள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

முதல்வரின் 110 விதி அறிவிப்பின்படி அனைத்து மாதங்களுக்கும் சம்பளம், பணிநியமன அரசாணை 177ன்படி 4 பள்ளிகளில் வேலை, இறந்தவர் குடும்பங்களுக்கும் மற்றும் 58 வயது பணிஓய்வில் சென்றவர்களுக்கும் ரூ.3லட்சம் குடும்பநலநிதி, மகளிர் ஆசிரியர்களுக்கு மகப்பேறுகாலவிடுப்பு, 7வது ஊதியக்குழு ஆணைப்படி 30சதவீத ஊதியஉயர்வு, அருகில் உள்ள பள்ளிகளில் விரும்பும் பள்ளிக்கு பணிமாறுதல் போன்ற சலுகைகளை வழங்காமலும், பணிநிரந்தரமும் செய்யாமலும், இவர்களை அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருவதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, 2017ம் ஆண்டு ஜீன் ஜீலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்விஅமைச்சர் செங்கோட்டையன் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தர செய்ய அரசு பரிசீலித்து வருகிறது எனவும், மேலும் பணிநிரந்தரம் செய்ய 3 மாதத்திற்குள் கமிட்டி அமைக்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார். ஆனால் 2 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை சட்டசபை அறிவிப்பை நிறைவேற்றாமல், பள்ளிக்கல்விஅமைச்சர் செங்கோட்டையன் மறுத்துவருவது பணிநிரந்தரத்தை நம்பி இருக்கும் இவ்வாசிரியர்களின், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கல்வித் துறையில் இதற்கு முன்னர் பகுதிநேரமாக நியமிக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பின்னர் முழுநேரவேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சித்துறையில் நியமிக்கப்பட்ட பகுதிநேரஎழுத்தர்கள் பின்னர் முழுநேரவேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

வருவாய்துறையில் பகுதிநேரமாக நியமிக்கப்பட்ட கிராம முன்சீப், கர்ணம், மணியக்காரர், கிராம்சை, தலையாரி, வெட்டியான் போன்றோர் பின்னர் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

பகுதிநேரமாக செயல்பட்டுவந்த இப்பணிகளை காலசூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்கள் சேவைக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அந்தந்த துறைரீதியாக பணிநிரந்தரம் செய்ததைப்போல, தற்போது பள்ளிக்கல்வித் துறையில் பகுதிநேரமாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என மேற்கோள்காட்டி கவர்னர், முதல்வர், துணைமுதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள், சட்டசபைக்குழு தலைவர் உள்ளிட்டவர்களுக்கு, இவர்கள் மாநிலம் தழுவிய அளவில் கருணை மனுக்களை அனுப்பி வருகின்றனர். மாணவர்கள் கல்விநலனுக்காக நியமிக்கப்பட்ட இந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு முன்வரவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளும்கூட.

கருணைமனு அனுப்பிவரும் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்களை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது,

நடந்து கொண்டிருக்கும் பட்ஜெட் சட்டசபை தொடரில் பணிநிரந்தரம் அறிவிப்பை அரசு வெளியிடக்கோரி கருணை மனுவை பகுதிநேர ஆசிரியர்கள் கவர்னர், முதல்வர், துணைமுதல்வர், கல்விஅமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சட்டசபை குழுதலைவருக்கு தமிழகம் முழுவதும் அனுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் ஜனவரி-2020ல் 16ஆயிரத்து 508 துப்புரவு பணியாளர்களை 3 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தவர்களை தமிழகஅரசு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி உள்ளது.

தற்போது விடுதிகளில் ரூ.3ஆயிரம் தொகுப்பூதியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களை தமிழகஅரசு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையன்று மார்ச் 21ந் தேதி அறிவித்துள்ளது.

ஒவ்வொரு துறையிலும் வரவேற்கதக்க முடிவுகளை வெளியிடுகிறார்கள். ஆனால் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் இம்முறை அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் மட்டுமே பரிசாக கிடைத்தது.

ஆனால் கிட்டதட்ட 10 கல்வியாண்டாக தொகுப்பூதியத்தில் பகுதிநேரமாக பள்ளிகளில் பணிபுரியும் 12ஆயிரம் ஆசிரியர்களை இன்னும் அடுத்த முன்னேற்றமான நிலைக்கு கொண்டு செல்லாமல் வைத்துள்ளது தமிழகஅரசு. இந்நிலையை மாற்றி முதல்வரின் 110வது விதியின் கீழ் அறிவிப்பு செய்து இவர்களையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த முன்வரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். அரசு இதனை காலந்தாழ்த்தாமல் அறிவிப்பு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

சுமராக 100கோடி நிதிஒதுக்கி நியமனம் செய்யப்பட்ட இவர்களுக்கு 10 ஆண்டுகளில் கிட்டதட்ட அதேஅளவு நிதியே தற்போதும் செலவிடப்படுகிறது. பெரியஅளவில் முன்னேற்றமில்லை.

இதே பாடப்பிரிவுகளில் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களைப் போலவே பணியமர்த்த, இவர்களுக்கு மேலும் 200கோடி நிதிஒதுக்கினாலே போதும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

போராட்ட காலங்களில் இந்த பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தியே, அரசு பள்ளிகளை திறந்து நடத்தி உள்ளது. ஆசிரியர்கள் போதிய வருகை இல்லாத போதும், இவர்களே வகுப்பறைகளை கவனித்து கொள்ள ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அலுவலகப்பணி உள்ளிட்ட எல்லா வகையிலும் பள்ளிப்பணிகளில் கிட்டதட்ட பள்ளிக்கு ஒரு உதவியாளராக தொடர்ந்து இவர்களே இன்றளவும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

எனவே அரசு மனிதநேயத்துடன் இவர்களின் குடும்பநலன் மற்றும் வாழ்வாதாரம் காத்திட கருணையுடன் கூடுதல் நிதிஒதுக்கி இவர்களின் நீண்டகால வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.

தொடர்புக்கு சி.செந்தில்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு செல் 9487257203

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!