சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம் விவசாயிகள் அதிருப்தி..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணையில் இருந்து ஏரி பாசனத்திற்காக, கடந்த மாதம் 5-ந் தேதி முதல் 35 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அன்றைய தினம் 119 அடி உயரம் கொண்ட அணையில், 97.5 கனஅடி நீர் இருப்பு இருந்தது.
வலது மற்றும் இடப்புற கால்வாய்கள் வழியாக திறக்கப்பட்டு, 88 ஏரிகளுக்கு வினாடிக்கு 250 மில்லியன் கன அடி தண்ணீர் பாய்ந்தது.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி 35 நாட்கள் ஆவதால் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நேற்று காலை நிறுத்தப்பட்டது.
அப்போது, அணையில் தண்ணீரின் அளவு 78.80 கன அடியாக இருந்தது. இதன் மூலம் பாசனத்திற்காக 19 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:- ஏரிகள் நிரம்புவதற்காக சாத்தனூர் அணையை கடந்த மாதம் திறந்துவிட்டனர்.
இதன்மூலம் ஏரிகளில் 80 சதவீதம் மட்டுமே நீர் நிரம்பியுள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டிருந்தால் ஏரிகள் முழுவதும் நிரம்பியிருக்கும். இதன்மூலம் வரும் கோடைகால பிரச்சனையை சமாளித்திருப்போம்’ என தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தண்ணீர் இருப்பு நிலவரத்திற்கு ஏற்ப தற்போது 35 நாட்களுக்கு மட்டுமே திறந்துவிடப்பட்டது.
மீதமுள்ள தண்ணீர், திருவண்ணாமலை நகராட்சி மற்றும் செங்கம், புதுப்பாளையம் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கும், பூங்கா பராமரிப்பு, மீன் வளர்ப்பு, முதலைகள் பராமரிப்பு ஆகியவற்றுக்கு தேவைப்படுகிறது.
இதுதவிர கோடை வெப்பம் அதிகரிப்பதால் நீர் ஆவியாதல் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.