அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்ட நிகழ்ச்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானா இடிந்து விழுந்ததில் அதிமுக கட்சியினர் வாய்க்காலில் விழுந்தனர்.மதுரை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே ரவுண்டானா அமைக்கப்பட்டு அங்கு மதுரையின் தொன்மையையும் வீரத்தையும் காட்டக்கூடிய சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் விளையாட்டு சிலைகள் வைக்கப்பட உள்ளது . இதன் தொடக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, அவர் நின்று கொண்டிருந்த ரவுண்டானா திடீரென இடிந்து விழுந்தது . இதில் உடனிருந்த அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளே விழுந்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானா இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.