17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஆயிரத்து இருபத்தி நான்கு மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா…

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஆயிரத்து இருபத்தி நான்கு மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா…

எழுதியவர்: Askar March 5, 2020, 7:44 pm

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஆயிரத்து இருபத்தி நான்கு மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா…

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் இன்று (மார்ச் 5,2020) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருத்தினராக பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் எஸ். சீனிவாசராகவன் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவமாணவியர்களுக்கு இயற்கையோடு இணைந்து வாழ பழகுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். 1967ல் தொடக்கப்பட்ட இக்கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இணைவுபெற்ற கல்லூரி) 1983ல் தமிழகத்திலே முதன் முதலில் இளநிலை கணிணி அறிவியல் பட்ட படிப்பை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றுது. அறிஞர் அண்ணா, அப்துல்கலாம் உள்ளிட்ட மிகப்பெரிய இந்திய ஆளுமைகளை இக்கல்லூரிக்கு நிர்வாகம் அவ்வப்போது அழைத்து வந்து இங்கு பயிலும் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தியிருப்பது பெருமைக்குரியது.

இன்று தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக நூல்களை வாசிப்பதும், நூலகங்கள் செல்வதும் குறைந்து விட்டது. எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்தாலும் ஒரு துறையில் உள்ள மனித ஆளுமையையும், மூலத்தையும் அகற்றிவிட முடியாது. இணையத்தில் (இ-நூலகம்) உள்ள அத்தனை தகல்வகளும் உறுதி செய்யப்பட்டவையா, உண்மைத் தன்மையுடையவையா, நம்பகத்தன்மை உடையனவா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நூல்கள் அப்படி அல்ல. அவைகள் நம்பகத்தன்மையுடையவை, உறுதி செய்யப்பட்ட தகவல்களை கொண்டவை. எனவே இந்த தலைமுறையினர் நூல்களை வாசிக்கிற பழக்கத்தை மேம்படுத்தி அறிவை புதுப்பிக்க வேண்டும். நாட்டில் பெண்கள் அதிகமாக கல்வி பெறுகிறார்கள். ஆனால் குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட மற்ற காரணிகளால் அவர்களால் உரிய வேலைவாய்ப்புக்கு செல்லமுடியவில்லை. ஆனால் கல்வியறிவு பெற்ற பெண்களால் குடும்பம் நல்ல வளர்ச்சி பெறும். சதுரங்கம், டென்னிஸ் விளையாட்டைச் சார்ந்த விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மகேஸ்பூபதிக்கு அவர்களுடைய தாயார் தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர்.

வசதியாக வாழ்வதை விட இயற்கையோடு வாழ்தல் சிறந்தது. இயற்கையோடு வாழும் போது தான் மண்ணின் மரபுகளும், இன மற்றும் மொழி அடிப்படையிலான கலச்சாரங்களும் காப்பற்றப்படும். நமது மரபுகளும், கலாச்சாரங்களும் தான் உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது. வேளாண்மையை கைவிட்டு வருகிறோம், நான் இளைஞராக இருந்து போது வீடுகளில் சுய தேவைக்கான காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இப்போது யாரும் அது போன்று தோட்டங்களை வளர்ப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் 25 மரங்களை வளர்த்து வனங்களை உருவாக்க வேண்டும். பட்டம் பெறுகிற ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த துறை வழியாக தங்களுடைய பகுதியின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவதன் மூலம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கமுடியும்.

இந்தக் கல்லூரி வழியாக பட்டங்களை பெற்று வாழ்வில் சிறப்படைந்திருக்கிற தாங்கள் அனைவரும் இந்தக் கல்லூரி மற்றும் இங்கு படிக்கிறவர்களுக்கு வழிகாட்டியாகவும், உதவியாகவும் இருக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாக குழுத் தலைவர் பொன் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினார்.

செயலர் பொன் ரவிசந்திரன் வரவேற்றார். முதல்வர் பொன் பெரியசாமி கல்லூரியின் ஆண்டு அறிக்கை வாசித்தார். நிர்வாக குழவைச் சேர்ந்த பொன். சிவனேஸ்வரி, தேன்மொழி தங்கராஜா, லோகநாதன், துணை முதல்வர் எஸ். குமாரராமன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. மீனாட்சி சுந்தரம், புல தலைவர்கள் தமிழ்மணி, சசிகுமார், டி. விஜிசரல் எலிசபெத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக் கழக அளவில் இளங்கலை விலங்கியல் பட்ட படிப்பில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற ஜி. விஜய் உள்பட 20 பல்கலை தர வரிசை பட்டியல்களுடன் 840 இளங்கலை பட்டம், 184 முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் உள்பட மொத்தம் 1024 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் டி.ஜெயபிரகாசம், பெற்றோர் கழக தலைவர் ராமதாஸ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், துறை தலைவர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!