ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை ஆட்டோ மூலம் பயணித்து விதைப் பந்துகள் மூலம் மரங்களை வளர்க்கும் சீரிய முயற்சியை ராமநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் துவங்கினார்.இராமநாதபுரம் ஓம் சக்தி நகர் ஆட்டோ ஓட்டுநர் சாகுல் ஹமீது,இவர் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தனது ஆட்டோ மூலம் கடந்த 2 ஆண்டுகளாக பிரசாரம் மேற்கொண்டு விதை பந்துகளை தூவி கடந்த இரண்டு ஆண்டுகளாக மரங்கள் நட்டு வருகிறார்.
இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து சென்னைக்கு 11 நாள் பயணித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து 20 ஆயிரம் விதை பந்துகள் கொடுத்து மரங்கள் வளர்க்கும் முயற்சியை இன்று துவங்கினார். கலாம் நினைவிடத்தில் இந்நிகழ்ச்சியை அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் கொடங்கி வைத்தார்.
ராமேஸ்வரத்தில் ‘ இன்று (மார்ச் 2) ஆட்டோ மூலம் புறப்பட்டு மண்டபம், உச்சிப்புளி, பெருங்குளம் வழியாக ராமநாதபுரம் சென்றடைந்தார். மார்ச் 3ல் சத்திரக்குடி, பரமக்குடி, இளையான்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மார்ச் 4 ல் திருமயம், புதுக்கோட்டை, கீரனூர் செல்கிறார். மார்ச் 5ல் திருச்சி, முசிறி, தொட்டியம், நாமக்கல் , மார்ச் 6ல் சேலம் மாநகரில் விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறார். மார்ச் 7ல் சேலம், தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாகுல் ஹமீது, மார்ச் 8 ல் கிருஷ்ணபுரி முழுவதும் பிரசாரம் செய்கிறார். மார்ச் 9 ல் வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், மார்ச் 10ல் ஆற்காடு, வாலஜா, ஸ்ரீபெரும்புதூர் நகரில் பிரசாரம் முடித்து அன்றிரவு சென்னை செல்கிறார். மார்ச் 11ல் சென்னை மாநகர் முழுவதும், என 1,500 கி.மீ., தூரம் பயணித்து, 20, ஆயிரம் விதைப்பந்துகள் வழங்கி மார்ச் 12ல் மெரீனா கடற்கரையில் நிறைவு செய்கிறார்.
செல்லும் வழிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் மழை வளம் பெற மரம் வளர்த்து இயற்கையை பேண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விதைப் பந்துகள் கொடுத்து மரம் வளர்ப்பி ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். வழி நெடுகிலும் விதை பந்துகளை வீச திட்டமிட்டுள்ளார். வேம்பு, புங்கை, சொர்க்கம், இயல்வாகை என விதை பந்து தயார் செய்துள்ளார். கடந்த 2018 டிசம்பரில் ராமநாதபுரம்- கன்னியாகுமரி வரை 6 ஆயிரம் விதைப் பந்துகளை தூவி உள்ளார் என குறிப்பித்தக்கது. இது குறித்து ஷாகுல் ஹமீது கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்கும் நோக்கில் இது வரை 90 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கி உள்ளேன். தமிழக அரசின் அடர்வனம் திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசார பயணத்தை கலாம் நினைவிடத்தில் மார்ச் 2 ல் தொடங்கி உள்ளேன். 11 நாட்கள் ஆட்டோவில் என் சொந்த செலவில் பயணித்து மார்ச் 12ல் சென்னையில் நிறைவு செய்கிறேன். இக்காலக்கட்டத்தில் 20 ஆயிரம் விதைப் பந்துகள் வழங்க திட்டமிட்டுள்ளேன். மழை வளம் பெருக, நாம் அனைவரும் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும். திருமணம், பள்ளி ஆண்டு விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு விதைப்பந்துகள், மரக்கன்றுகள் வழங்கி மரம் வளர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.




You must be logged in to post a comment.