தமிழக அரசின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம், விருதுநகர் உள்பட 11 மாவட்டங்களில் ரூ.3,995 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இக்கல்லூரிகளில் உடனடியாக வகுப்புகளை தொடங்க முதல் கட்டமாக மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டுமான பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தி உள்ளது. இதன்படி, ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரகம் அருகே 22.6 ஏக்கர் பரப்பில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதில் மருத்துவக்கல்லூரி கட்டடம் ரூ.125.01 கோடி, மருத்துவமனை கட்டடம் ரூ.150.01 கோடி, குடியிருப்பு கட்டடம் ரூ.69.98 கோடி என ரூ.345 கோடியில் கட்டப்படுகின்றன. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.5.87 கோடி மதிப்பில் நிறைவடைந்த 5 திட்டங்கள், ரூ.18.33 கோடி மதிப்பில் 9 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு துறை சார்பில் 21,105 பயனாளிகளுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் தலைமை செயலர் க.சண்முகம் வரவேற்றார். தமிழக சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்துரை பேசினார். மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் நன்றி கூறினார்.
தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சி சீனிவாசன் ( வனத்துறை), கே.ஏ. செங்கோட்டையன் (பள்ளிக்கல்வி துறை), செல்லூர் கே. ராஜு (கூட்டுறவு துறை), கே.பி. அன்பழகன் (உயர்கல்வி துறை), வெ.சரோஜா (சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறை), எம்.சி சம்பத் (தொழில் துறை), ஆர்.காமராஜ் (உணவு துறை), ஓ.எஸ்.மணியன் (கைத்தறி துறை), உடுமலை கே. ராதாகிருஷ்ணன் (கால்நடை பராமரிப்பு துறை), இரா.துரைக்கண்ணு (வேளாண் துறை), கடம்பூர் ராஜூ (செய்தி மற்றும் விளம்பர துறை), ஆர்.பி.உதயக்குமார் (வருவாய் துறை), வெல்லமண்டி என். நடராஜன் (சுற்றுலா துறை), நிலோபர் கபில் (தொழிலாளர் நலத்துறை), வி.எம். ராஜலட்சுமி (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை), க.பாஸ்கரன் (கதர், கிராமத் தொழில்கள் வாரிய துறை), சேவூர் எஸ், ராமச்சந்திரன் (இந்து அறநிலையத்துறை), எஸ்.வளர்மதி(பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை), தமிழக சுகாதாரத்துறை செயலர் பியூலா ராஜேஷ், நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அன்வர்ராஜா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.நவாஸ் கனி (ராமநாதபுரம்) ஓ.பி.ரவீந்திர நாத் (தேனி), சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம். மணிகண்டன்(ராமநாதபுரம்), கருணாஸ் (திருவாடானை), எஸ். பாண்டி (முதுகுளத்தூர்), என்.சதன் பிரபாகர் (பரமக்குடி), , மாவட்ட ஊராட்சி தலைவர் உ. திசை வீரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி (மாவட்ட செயலர்-அதிமுக), மாவட்ட ராம்கோ தலைவர் முருகேசன், பரமக்குடி நகராட்சி முன்னாள் தலைவர் கீர்த்திகா முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.










You must be logged in to post a comment.