18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று(பிப்ரவரி 19, 1473).

உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று(பிப்ரவரி 19, 1473).

எழுதியவர்: mohan February 19, 2020, 9:39 am

நிகோலஸ் கோபர்நிகஸ் பிப்ரவரி 19, 1473ல் போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார்.1491இல் கோப்பர்னிக்கஸ் கிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். இங்கே தான் அவருக்கு வானியலுடன் பழக்கம் ஏற்பட்டது. இவரது ஆசிரியராக இருந்த அல்பேர்ட் புருட்செவ்ஸ்கி என்பவரின் உதவியால் அவருக்கு வானியலில் ஆர்வம் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் சில காலம் தோர்னில் தங்கியிருந்த பின்னர், இத்தாலிக்குச் சென்று அங்குள்ள பொலொக்னாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவரது கல்விக்குப் பண உதவி புரிந்த அவரது மாமனார், கோப்பர்னிக்கஸ் ஒரு பேராசியராக வரவேண்டுமென விரும்பினார். அங்கே படித்துக்கொண்டிருந்தபோது, பிரபல வானியலாளராக இருந்த ஆசிரியர் டொமெனிக்கோ மரியா நோவரா டா பெராராவைச் சந்தித்தார். கோப்பர்னிக்கஸ் அவரிடம் படித்ததோடு அவருடைய சீடராகவும், உதவியாளராகவும் ஆனார்.எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன.

சூரியனை நிறுத்தி விட்டு பூமியைச் சுற்ற வைத்தவர்!சூரியன் பூமியைச் சுற்றவில்லை; பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று உலகில் முதல் முதலில் சொன்ன விஞ்ஞானி கோபர் நிக்கஸ்.வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரியனை மையமாகக் கொண்டே பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன என்கிற சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார்.கோள்களின் பின்னோக்கிய நகர்வு அவற்றின் ஒளி வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கினார்.விண்மீன்கள் அமைந்துள்ள இடங்களை வரையறுத்துக் கூறினார்.

அந்த விஞ்ஞானி எத்தகைய எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. என்பதை நாமிப் போது எண்ணிப் பார்க்கக் கூட கடினமாக இருக்கும். கோபர் நிக்கசை மிகவும் கடுமையாக விமர்சித்துக் கண் டனக் கணைகளை ஏவியவர் மார்ட்டின் லுத்தர். ஆம், மதவுலகில் பெரும் புரட்சிக் காரராக விளங்கினாரே அதே மார்ட்டின் லுத்தர்தான்.லுத்தர் கூறுவது ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வண்டியிலோ, கப்பலிலோ அமர்ந்திருப்பவன் ஒருவன்தான் நிலையாக இருப்பதாகவும் பூமியும் மரங்களும்தான் தன்னை நோக்கி வந்து போகின்றன என்றும் கற்பனை செய்வது போலல்லவா இது இருக்கிறது.

‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், கத்தோலிக்க கிறிஸ்தவ பழமை வாத திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்துதான் அதனை வெளியிட்டார்.தத்துவ ஞானியான பிரான்சிஸ் பேகன் கூட கோபர் நிக்கஸ்மீது கண்டனக் கணை ஏவினாரே. என்றாலும் இறுதியில் வென்றது எது? விஞ்ஞானம் அல்லவா?ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நூலில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார்.

இதில் பூமி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும் பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார். புவி, தனது அச்சில் தினசரி சுழல்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே தொலைவில் உள்ள விண்மீன்கள் நகருவதாகத் தோன்றுகின்றன, உண்மையில் விண்மீன்கள் அசைவுறாத வானக்கூரையில் நிலையாக அமைந்துள்ளன.வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல் சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசு தூதர் என பல துறைகளில் தனது பங்களிப்பை வழங்கியவர்.

நிகோலஸ் கோபர்நிகஸ் தனது 70ஆவது வயதில் மே 24, 1543 ல் காலமானார்.கோப்பர்னிக்கஸ் இறக்கும் சந்தர்ப்பத்தில் பக்கவாதம் தாக்கிக் ஆழ்மயக்க நிலையில் இருந்தார். ஆழ்நிலை மயக்கத்தில் அவர் இருந்தபோது அவரது நூல் அச்சிட்டு எடுத்துவரப்பட்டு அவரது கரங்களில் வைக்கப்பட்டது, உடனே அவர் தனது ஆழ்மயக்க நிலையிலிருந்து மீண்டு, விழிப்புணர்வு பெற்றுத் தனது வாழ்நாள் சாதனையான அந்நூலைப் பார்த்தபின் தான் இறந்தார்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் பேராசிரியர்,

                           நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!