17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு.. தேடப்பட்ட காவலர் சித்தாண்டி கைது..

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு.. தேடப்பட்ட காவலர் சித்தாண்டி கைது..

எழுதியவர்: ஆசிரியர் February 4, 2020, 4:43 pm

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட காவலர் சித்தாண்டி சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கினார். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்தாண்டு செப்டம்பர் 1ல் நடந்தது. இதில் வெற்றி பெற்று தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்கள் பிடித்தவர்களில் 39 பேர், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பதால் தேர்வில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி நடத்திய விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்தது உறுதியானது. இதையடுத்து, குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு அரசு பணி தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மேலும், முறைகேட்டுக்குத் துணை புரிந்த டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். முறைகேட்டுக்கு மூளையாக செயல்பட்ட சென்னை புதுப்பேட்டையில் வசிக்கும் காவலர் சித்தாண்டி, இடைத்தரகர்  சென்னை  ஜெயக்குமார் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அவரது செல்போன் அழைப்புகள் மற்றும் இருப்பிடம் குறித்து ஜிபிஆர்எஸ் மூலம் கண்காணித்தனர். – ராமநாதபுரம்- சிவகங்கை சாலையில் உள்ள வயல்காட்டில் அமைந்த குடிசையில் சித்தாண்டி செல்போன் பயன்பாட்டில் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சித்தாண்டி சுற்றி வளைத்து பிடித்தனர். மேல் விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் காரில் சென்னை அழைத்துச் சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!