இராமநாதபுரம் அருகே அழகன்குளம் ஊராட்சியில் குடியரசு தின சிறப்பு சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது.அவர் பேசியதாவது: மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் ஊராட்சியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் இருப்பதை தொல்லியல் துறை கண்டெடுத்துள்ளது.
தமிழக முதல்வரின் பல்வேறு அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 429 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப தூய்மை காவலர்கள் ஊராட்சி தூய்மையை கண்காணிப்பர். ஊராட்சித் தலைவரே தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேசிய அளவில் விருது பெற சிறப்பாக செயல்பட வேண்டும். திறந்தவெளி மலம் கழித்தலற்ற கிராமங்களாக அறிவிப்புடன் நின்று விடாமல், அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். முழு சுகாதார கிராமமாக மாற்ற வீடுகள், பொது இடங்கள், பள்ளிகளில் சுகாதாரம் பேண வேண்டும். முதல்வரின் குடிமராமத்து திட்டத்தை நடப்பாண்டு மக்கள் இயக்கமாக மாற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நீர் நிலை ஆக்கிரமிப்புகள் பராபட்சமின்றி அப்புறப்படுத்த முனைப்பு காட்ட வேண்டும். தடுப்பணைகள் கட்ட பொதுப்பணி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் சமுதாயக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு ஊரக வாழ்வு திட்டம், முத்ரா திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பெண்கள், படித்த வேலை வாய்ப்பற்ற இளையோர் சுய தொழில் தொடங்க முன்னுரிமை அடிப்படையில் மானிய கடன் வழங்கப்படும் என்றார். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் தேசிய வாக்காளர் தினம் , தூய்மை பாரத இயக்கம் தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், ஊராட்சி ஒன்றியத்தலைவர் சுப்புலட்சுமி , அழகன்குளம் ஊராட்சி தலைவி வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் ஊராட்சியில் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
எழுதியவர்: mohan January 26, 2020, 2:24 pm




You must be logged in to post a comment.